கோவை கொடிசியா வளாகத்தில் 3 நாட்கள் நடைபெறவுள்ள இந்த கண்காட்சிக்கு, பல்வேறு மாநிலங்களில் இருந்து 88 நிறுவனங்கள் பங்கேற்கும் என்றும் ரூ.150 கோடி வரை வர்த்தகம் நடைபெறும் என்று கொடிசியா அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
கோவை: கொடிசியா மைதானத்தில் வரும் 14ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை மூலப்பொருட்கள் மற்றும் இடு பொருட்களுக்கான 2 வது பதிப்பு கண்காட்சி நடைபெற உள்ளதாக கொடிசியா அமைப்பின் நிர்வாகிகள் அறிவித்துள்ளனர்.
நாட்டிலேயே மூலப்பொருட்கள் இடுபொருட்கள் மற்றும் சேவைக் கண்காட்சியாக ”கோவையில் "RAW MAT INDIA 2022” எனும் கண்காட்சி கோவை கொடிசியாவில் வரும் 14 ந்தேதி துவங்கி மூன்று நாட்கள் நடைபெற உள்ளது.
இது தொடர்பான செய்தியாளர்கள் சந்திப்பு கொடிசியா அலுவலக அரங்கில் நடைபெற்றது. இதில் கொடிசியா தலைவர் திருஞானம், Raw mat India 2022 கண்காட்சியின் தலைவர் செந்தில் குமார் மற்றும் நிர்வாகிகள் சரவணக்குமார், சசிக்குமார் ஆகியோர் செய்தியாளர்களிடம் பேசினர்.
அப்போது, இரண்டாவது பதிப்பாக நடைபெறும் இந்த கண்காட்சியில், ஃபவுண்டரி, கட்டுமானம், ஆட்டோ மொபைல்ஸ், டெக்ஸ்டைல், இன்ஜினியரிங், மின்சாரம், தகவல் தொழில்நுட்பம், விவசாயம், ராணுவம், எரிவாயு, ரயில் மற்றும் விமான போக்குவரத்து சம்பந்தப்பட்ட தொழில்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும்.
இந்த கண்காட்சியில், மேற்கு வங்கம், மகாராஷ்டிரா, கேரளா, புதுச்சேரி, குஜராத், கர்நாடகா மற்றும் தமிழகத்தில் இருந்து 88 நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன.
கண்காட்சியின் திறப்பு விழாவில், தலைமை விருந்தினராக சூலூர் விமானப் படை அதிகாரி ஏர் கம்மாடர் சஞ்சீவ் மற்றும் JSW நிறுவனத்தின் தலைமை விற்பனை மேலாளர் சஜி சாமுவேல் மற்றும் தரங் தேசாய் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர்.
சுமார் பத்தாயிரம் பார்வையாளர்கள் மற்றும் 150 கோடி ரூபாய் வர்த்தகம் நடைபெற வாய்ப்புள்ளது. பார்வையாளர்கள் இக்கண்காட்சியை தினமும் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை அனுமதிக்கப்படுவார்கள், என தெரிவித்தனர்.