திருப்பூரில் நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்ற முதல்வர், கோவை அவிநாசி சாலையில் புதிதாக கட்டப்பட்டுள்ள கயிறு வணிக மேம்பாட்டு நிறுவன அலுவலகத்தை காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.
திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் நடைபெறும் அரசு விழாவில் கலந்து கொண்டுள்ள தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறு, குறு, நடுத்தர, தொழில் நிறுவனங்களுக்காக பல்வேறு திட்டங்களை துவக்கி வைக்கவுள்ளார்.
நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, கோவை விமான நிலையம் எதிரே தமிழ்நாடு கயிறு வணிக மேம்பாட்டு நிறுவன அலுவலக கட்டிடத்தை (டான்காயர்) காணொலி காட்சி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்திறந்து வைத்தார்.
இந்த திறப்பு விழாவில், கோவையில் இருந்து மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் மற்றும் கோவை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மேலும், கோவை மாவட்டத்தில் சொலவம்பாளையம்கிராமத்தில் 42.42 ஏக்கரில் 18. 12 கோடி திட்ட மதிப்பீட்டில் 9.6 கோடி மானியத்துடன் கூடிய தனியார் தொழிற்பேட்டை அமைக்க அடிக்கல் நாட்டினார்.
இதேபோல், கோவை சிட்கோ தொழிற்பேட்டையில் 22 கோடி மதிப்பீட்டில் தரைத்தளம் மற்றும் மூன்று தலங்கள் கொண்ட 510 தொழிலாளர்கள் பயனடையும் வகையில் தொழிலாளர்கள் தங்கும் விடுதி அமைக்கும் பணிக்கும் முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்.