இன்று இரவு ஞானியார் நகர் பகுதியில் தெரு நாய் ஒன்று அங்கு விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளை தொடர்ச்சியாக கடிக்க துவங்கியுள்ளது. இதில் 10 குழந்தைகள் உட்பட 11 பேர் காயமடைந்தனர். சிகிச்சை பெற்று வருபவர்களை, காவல் ஆணையர் மற்றும் ஆட்சியர் நேரில் பார்வையிட்டனர்.
கோவை: கோவை 84 ஆவது வார்டு கரும்புக்கடை அருகே ஞானியார் நகரில் தெரு நாய் கடித்ததில் 10 குழந்தைகள் உட்பட 11 பேர் காயங்களுடன் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கோவை மாநகராட்சி 84 ஆவது வார்டுக்கு உட்பட்ட கரும்புக்கடை, ஜி.எஸ்.நகர் பகுதிகளில் தெரு நாய்கள் அதிகளவு உள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வந்தனர். இந்நிலையில், கரும்புக்கடை ஞானியார் நகர் பகுதியில் நேற்று இரவு திடீரென அங்கிருந்த தெரு நாய் ஒன்று அங்கு விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளை தொடர்ச்சியாக கடிக்க துவங்கியுள்ளது.
தப்பிச் செல்ல முயன்ற குழந்தைகளை துரத்தி துரத்தி கடித்துள்ளது. இதில், 10 குழந்தைகள் உட்பட 11 பேர் காயமடைந்தனர். இதையடுத்து, காயமடைந்த 11 பேரும் கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டு, அங்கு
சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
சம்பவம் குறித்து தகவலறிந்து கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ். சமீரன், மாநகர காவல் ஆணையாளர், பாலகிருஷ்ணன் ஆகியோர் குழந்தைகளை நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர். மேலும், 84 ஆவது வார்டு கவுன்சிலர் அனிமா ராஜா உசேன் பாதிக்கப்பட்டகுழந்தைகளை நேரில் சந்தித்தார்.
பின்னர் இது குறித்து பேசிய கவுன்சிலர் அனிமா ராஜா உசேன், 84 ஆவது உள்ள கரும்புக்கடை, ஜி.என்.மில்ஸ் பகுதியில் சுமார் 30 ஆயிரம் மக்கள் தொகை உள்ளது. இங்கு தெரு நாய் அதிகளவு உள்ளதாக ஏற்கனவே மாநகராட்சியில் புகார் அளித்துள்ளேன். மேலும், இது குறித்து மாமன்ற கூட்டத்திலும் பேசியுள்ளேன். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் மீண்டும் மாமன்ற கூட்டத்தில் இதே பிரச்சனைக்கு உடனடியாக தீர்வுக் காண வலியுறுத்த உள்ளதாக தெரிவித்தார்.