தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசு பொது மக்களின் கவனத்தை திசைதிருப்ப முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் ரெய்டு நடத்தி வருவதாக முன்னாள் சட்டப்பேரவை துணை சபாநாயகரும், சட்டமன்ற உறுப்பினருமான பொள்ளாச்சி ஜெயராமன் திருப்பூரில் பேட்டியில் தெரிவித்தார்.
திருப்பூர்: திருப்பூர் மாநகர் மாவட்ட அதிமுக செயல் வீரர்கள் கூட்டம் பெரிய கடைவீதியில் உள்ள மாநகர மாவட்ட அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
இதில் முன்னாள் சட்டப்பேரவை துணை சபாநாயகரும், திருப்பூர் மாநகர் மாவட்ட அதிமுக செயலாளருமான பொள்ளாச்சி ஜெயராமன் எம்எல்ஏ கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் அதிமுக தொடர்ந்து பத்தாண்டு காலம் ஆட்சி செய்த போது எந்த விதமான கட்டணத்தையும் உயர்த்தாத நிலையில் திமுக அரசு தற்போது மின் கட்டணத்தை உயர்த்தி இருப்பது பொதுமக்களுக்கு ஒரு பேரிடியாக அமைந்திருப்பதாகவும், திமுக அரசின் மீது உள்ள கோபத்தை காட்டும் வகையில் அதிமுகவின் ஆர்ப்பாட்டத்தில் பொதுமக்கள் பெருந்திரளாக கலந்து கொள்வார்கள் எனவும், தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் பொதுமக்களின் கவனத்தை திசை திருப்பவே முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் திமுக அரசு ரெய்டு நடத்தி வருவதாகவும் குற்றம் சாட்டினார்.
இந்த செயல் வீரர்கள் கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர் விஜயகுமார் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.