மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் திமுக மற்றும் கூட்டணி கட்சி மாமன்ற உறுப்பினர்கள் பெரும்பான்மை பலத்தால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதால், தமிழக அரசின் அனுமதிக்கு அனுப்பப்பட்டு இருப்பதாக கூறி பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்தார். இதனை அடுத்து, மாமன்ற கூட்டம் நடைபெற்றது.
திருப்பூர்: திருப்பூர் பழைய பேருந்து நிலையத்திற்கு முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி பெயர் சூட்டுவது தொடர்பாக திருப்பூர் மாவட்டத்தில் அதிமுக - திமுக உறுப்பினர்களிடையே அமளி ஏற்பட்டது.
திருப்பூர் மாநகராட்சி அலுவலக மாமன்ற கூட்டரங்கில் மாமன்ற உறுப்பினர்கள் கூட்டம் மாநகராட்சி மேயர் தினேஷ் குமார் தலைமையில் இன்று நடைபெற்றது.
இதில், கடந்த மாமன்ற கூட்டத்தொடரின் போது ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பழைய பேருந்து நிலையம் புதுப்பிக்கப்பட்டு வரக்கூடிய சூழ்நிலையில், புதுப்பிக்கப்பட்ட பழைய பேருந்து நிலையத்திற்கு கலைஞர் கருணாநிதி மத்திய பேருந்து நிலையம் என பெயர் சூட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதற்கு திமுக மற்றும் கூட்டணி கட்சி மாமன்ற உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்து இருந்த நிலையில் அதிமுக மற்றும் பாஜக மாமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், அதிமுக மாமன்ற உறுப்பினர் அன்பகம் திருப்பதி கடந்த கூட்டத்தொடரில் அதிமுக மற்றும் பாஜக எதிர்ப்பு தெரிவித்து இருந்த நிலையில், மாமன்ற தீர்மான புத்தகத்தில் ஏகமானதாக நிறைவேற்றப்பட்டு தமிழக அரசின் அனுமதிக்கு அனுப்பப்பட்டு இருப்பதாகக் குறிப்பிடப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பேசினார்.
இதற்கு திமுக மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் மாமன்ற கூட்டத்தில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.
இதையடுத்து மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் திமுக மற்றும் கூட்டணி கட்சி மாமன்ற உறுப்பினர்கள் பெரும்பான்மை பலத்தால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதால் தமிழக அரசின் அனுமதிக்கு அனுப்பப்பட்டு இருப்பதாக கூறி பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்தார். இதனை அடுத்து, மாமன்ற கூட்டம் நடைபெற்றது.
கடந்த ஆட்சி காலத்தின் போது திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குப்பைகளை சேகரிக்க வாங்கிய பேட்டரி வாகனங்களில் பெருமளவு ஊழல் முறைகேடு நடைபெற்று இருப்பதாகவும், இதனை விசாரிக்க தனி குழு நியமிக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் கோரிக்கை வைத்தனர்.
திருப்பூர் பழைய பேருந்து நிலையம் அருகே சாலையோரங்களில் வாகனத்தை நிறுத்துவதற்கு மாநகராட்சி நிர்வாகம் கட்டணம் விதித்திருக்கும் நடை முறையை கைவிட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாமன்ற உறுப்பினர் மாநகராட்சி மேயர் மற்றும் ஆணையாளரிடம் கோரிக்கை வைத்தார்.