ஒவ்வொரு இந்தியரும் இப்படத்தைப் பார்க்க வேண்டும், தமிழக அரசு இத்திரைப்படத்துக்கு வரிவிலக்கு அளிப்பதுடன், அனைத்துக் கல்லுாரிகளிலும் திரையிட வேண்டும், என, தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுக்கிறேன்.
கோவை: நடிகர் மாதவன் இயக்கி நடித்துள்ள, ‘ராக்கெட்ரி: நம்பி விளைவு’ படத்தை ஒரு பாடமாக எடுத்துக்கொண்டு, நமது விஞ்ஞானிகளை, நாட்டின் வளர்ச்சியை பாதுகாத்து, வெளிநாடுகளின் சதித்திட்டங்களை முறியடிக்க வேண்டும் என்றும் இப்படத்திற்கு, தமிழக அரசு வரிவிலக்கு அளிப்பதுடன், அனைத்துக் கல்லுாரிகளிலும் திரையிட வேண்டும், என, தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுக்கிறேன் என்று இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார்.
திரைப்படம் குறித்து கருத்து தெரிவிக்க செய்தியாளர்களை சந்தித்த இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத், ராக்கெட்ரி படத்தை, தயாரித்து, இயக்கி, நடித்துள்ள மாதவன், நம்பி நாராயணனாகவே வாழ்ந்துள்ளார். நம்பி நாராயணன், கிரையோஜெனிக் தொழில்நுட்பத்தை, இந்தியாவுக்கு கொண்டு வந்தவர். நம்நாட்டில் "விகாஸ்" என்ற இன்ஜினை உருவாக்கியவர்.
தலைசிறந்த விஞ்ஞானியான அவர், திருநெல்வேலியைச் சேர்ந்தவர். நம்பி நாராயணனின் அறிவியல் அறிவுக்கு முன், உலகமே தலை வணங்கியது. ஆனால், போட்டியாளர்கள், அவருக்கு தொந்தரவு கொடுத்து, அவர் தகாத உறவோடு வாழ்ந்தார் என அவர் மீது பழி சுமத்தினர். பாகிஸ்தானுக்கு, நமது தொழில்நுட்பங்களை விற்று, தேச துரோகம் செய்தார் என வழக்குத் தொடர்ந்து, அவரைத் துன்புறுத்தி, சிறையில் அடைத்தனர்.
இதன் காரணமாக, கிரையோஜெனிக் தொழில்நுட்பத்தில் நமது நாடு 10 ஆண்டுகள் பின்தங்கியது. இது இந்தியாவின் ஒவ்வொரு வளர்ச்சியையும் தடுப்பதற்கான மிகப்பெரும் சதித்திட்டம். நம்பி நாராயணனைப் பொறுத்தவரை, அமெரிக்காவில் சதித்திட்டம் தீட்டப்பட்டு, அவர் அவமானப்படுத்தப்பட்டார்.
நம்பி நாராயணன், உச்ச நீதிமன்றத்தில் தன் மீதான பொய் வழக்கில் போராடி வென்றது, அவரின் குடும்பத்தில் ஏற்பட்ட பாதிப்புகள் என, அனைத்தையும் இப்படத்தில் அற்புதமாக காட்சிப்படுத்தியுள்ளனர். ஒவ்வொரு இந்தியரும் இப்படத்தைப் பார்க்க வேண்டும், தமிழக அரசு இத்திரைப்படத்துக்கு வரிவிலக்கு அளிப்பதுடன், அனைத்துக் கல்லுாரிகளிலும் திரையிட வேண்டும், என, தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுக்கிறேன்.
இத்திரைப்படம் நிறைவுபெறும் போது, நம்பிநாராயணன் வேறு, மாதவன் வேறு என வித்தியாசப்படுத்திப் பார்க்க முடியாது. துணிச்சலுடன் இப்படத்தை எடுத்துள்ளார் மாதவன்.
அணைகட்டுவதோ, மின் உற்பத்தியோ நம் நாட்டில் எந்தவொரு வளர்ச்சித் திட்டமாயினும், அது பற்றிய தவறான செய்திகளைப் பரப்பி, நாட்டின் வளர்ச்சியைத் தடுக்கிறார்கள்.
இப்படத்தை ஒரு பாடமாக எடுத்துக்கொண்டு, நமது விஞ்ஞானிகளை, நாட்டின் வளர்ச்சியை பாதுகாக்க வேண்டும். வெளிநாடுகளின் சதித்திட்டங்களை முறியடிக்க வேண்டும். இந்திய அரசு இப்படத்துக்கு வரிச்சலுகை வழங்க வேண்டும்", என்று தெரிவித்துள்ளார்.