நகர்ப்புறத்தில் செல்லப் பிராணிகளை அடக்கம் செய்ய மின் மயானத்திற்கும், பராமரிப்பிற்கும் இடமும் ஒதுக்கும் பட்சத்தில், அரசு சட்ட திட்டங்களுக்கு கட்டுப்பட்டு செல்லப் பிராணிகளை பராமரிப்போம் என்று மனு அளித்துள்ளனர்.
கோவை: செல்லப் பிராணிகளை அடக்கம் செய்ய மின் மயானம் வேண்டும், என்று கோவையை சேர்ந்த எழுச்சி கரங்கள் அறக்கட்டளையினர், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
இது குறித்து அறக்கட்டளையின் அறங்காவலர் ராஜ் கிருஷ்ணா அளித்த மனுவில், எங்கள் அறக்கட்டளை சார்பில் கடந்த 10 ஆண்டுகளாக செல்லப் பிராணிகள் சாலை விபத்துகளில் அடிபட்டு கிடந்தால் முதலுதவியும், உயிரிழந்து கிடந்தால் நல்லடக்கமும் செய்து வருகிறோம்.
கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு, கோவை மாவட்ட ஆட்சியராக இருந்த கருணாகரனிடம், மயானம் அமைக்க இடம் ஒதுக்க மனு கொடுக்கப்பட்டது. மனுவை பெற்றுக்கொண்ட ஆட்சியர், கிணத்துக்கடவு பகுதியில் இடம் ஒதுக்க பரிந்துரைத்தார். நாங்கள் நகர்ப்புற பகுதியில் இடம் கேட்டதால், பரிசீலனை நடைபெற்று வருவதாக தெரிவித்தார். பின்னர், பொதுமக்கள் நகர்ப்புற பகுதியில் செல்லப் பிராணிகளை அடக்கம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதால், மிகவும் சிரமமாக உள்ளது, எனக் குறிப்பிட்டிருந்தார்.
எனவே, எங்களுக்கு முன்னுரிமை கொடுத்து நகர்ப்புறத்தில் செல்லப் பிராணிகளை அடக்கம் செய்ய மின் மயானத்திற்கும், பராமரிப்பிற்கும் இடமும் ஒதுக்கும் பட்சத்தில், அரசு சட்ட திட்டங்களுக்கு கட்டுப்பட்டு செல்லப் பிராணிகளை பராமரிப்போம், என்று அவர்கள் மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.