கோவை மக்களின் வரிப்பணத்தை முறையாக பயன்படுத்துவதில்லை மற்றும் மாநகராட்சியில் ஊழல் நடைபெறுவதாக குற்றம்சாட்டி அதிமுக மாமன்ற உரிவினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
கோவை: கோவை மக்களின் வரிப்பணத்தை மேயரின் வீட்டை அழகுப்படுத்த பயன்படுத்தப்படுவதாகவும், தொடர்ந்து மாநகராட்சியில் பல்வேறு வகையில் ஊழல் நடைபெற்று வருவதாக, அதிமுக மாமன்ற குழு தலைவர் பிரபாகரன் குற்றம் சாட்டிய நிலையில், கூட்டத் தொடரை புறக்கணித்து அதிமுக கவுன்சிலர்கள் இன்று வெளிநடப்பு செய்தனர்.
கோவை மாநகராட்சி மாமன்ற சாதாரண கூட்டம் இன்று நடைபெறுவதாக அறிவித்த நிலையில், அதில் கலந்து கொள்ள வந்த அதிமுக மாமன்ற குழு தலைவர் பிரபாகரன் மற்றும் கவுன்சிலர்கள் ஷர்மிளா சந்திரசேகர், ரமேஷ் ஆகியோர் மாநகராட்சி மாமன்றத்தின் முன்பாக மேயரின் வீட்டை அழகுபடுத்த ஒரு கோடி ரூபாய் நிதியா..? ஊழல் நடக்குதுங்கோ, ஊழல் நடக்குதுங்கோ, என்ற பதாகைகளை கையில் ஏந்தி மாமன்றத்தின் முன்பாக தரையில் அமர்ந்து கோஷங்கள் எழுப்பி தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
அதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அதிமுக மாமன்ற குழு தலைவர் பிரபாகரன்,
கோவை மாநகராட்சி மக்களை விரட்டி விரட்டி வாங்கிய வரிகளை மக்களுக்கான நலத் திட்டங்களுக்கு பயன்படுத்தாமல், கோவை மாநகராட்சி திமுக மேயர் தங்குவதற்கான வீட்டை அழகு படுத்துவதற்கு ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்ததாகவும், கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலக பராமரிப்பிற்கு ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கியது, கோவை மாநகராட்சி பிரதான அலுவலகம் கட்ட பராமரிப்புக்கு ஒரு கோடி என்றும் கோடிகளில் நிதி ஒதுக்கி முறைகேடுகளில் ஈடுபட்டு வருவதாகவும் குற்றம்சாட்டினார்.
இவற்றிற்கெல்லாம் முறையாக டெண்டர் விடப்பட்டுள்ளதா.? என்பதிலும் குழப்பம் ஏற்பட்டுள்ளதாக கேள்வி எழுப்பிய அவர், திடீரென கோவை மத்திய மண்டலத்தில் மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளுக்கான 6 கோடி ரூபாய் வீட்டு வரியை ரத்து செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், வரியை ரத்து செய்த வீடுகள் யாருடையது..? என்பது இதுவரை தெரியவில்லை என்றும் இதனால் கோவை மாநகராட்சிக்கு மிகப்பெரிய வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், பிரபாகரன் குற்றம்சாட்டினர்.