கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில் உள்ள பொதுக் கழிப்பறையில் சிறுநீர் கழிக்கச் சென்ற நபரிடம், சிறுவர்கள் இருவர் துணையோடு செல்போன் மற்றும் பணத்தை திருடிச் சென்ற நபரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கோவை: கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில் உள்ள பொதுக் கழிப்பறையில் சிறுநீர் கழிக்கச் சென்ற நபரிடம், சிறுவர்கள் இருவர் துணையோடு செல்போன் மற்றும் பணத்தை திருடிச் சென்ற நபரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர் விஜயகுமார். இவர் கோவை வந்திருந்தார். குனியமுத்தூர் பகுதிக்கு செல்வதற்கு அவர் கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்திற்கு சென்றிருந்தார். அப்போது அங்குள்ள பொது கழிப்பிடத்திற்கு சிறுநீர் கழிக்க விஜயகுமார் சென்றுள்ளார்.
அப்போது அவரை பின் தொடர்ந்து சென்ற 2 சிறுவர்கள் மற்றும் ஸ்டீபன் ராஜ் ஆகியோர் விஜயகுமாரை மடக்கி உள்ளனர். மூவரும் சேர்ந்து விஜயகுமாரின் கைகளை இறுக்கமாக பிடித்து, அவரிடம் செல்போன் மற்றும் சுமார் ஆயிரம் ரூபாய் பணத்தை திருடிக்கொண்டு தப்பி ஓடினர். பணம் மற்றும் செல்போனை பறிகொடுத்த விஜயகுமார் காட்டூர் காவல் நிலையத்தில் இது தொடர்பாக புகார் அளித்தார்.
இதையடுத்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் காந்திபுரம் 2-வது தெருவைச் சேர்ந்த ஸ்டீபன் ராஜ் மற்றும் இரண்டு சிறுவர்களையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ஸ்டீபன் ராஜ் சிறையில் அடைக்கப்பட்டார்.