தமிழக முதல்வர் தொழிலாளர்களுக்கு ஏற்படும் இன்னல்களை தனக்கு ஏற்பட்ட இன்னலாக கருதி, தொழிலாளர்கள் சாலையில் கொடி பிடித்து கொண்டு போராடாத நிலையை உருவாக்கி உள்ளதாக அமைச்சர் சிவி கணேசன் தெரிவித்தார்.
கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரிய உறுப்பினர்களுக்கு அரசு உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி, நல வாரிய தலைவர் பொன்குமார் தலைமையில் நடைபெற்றது.
இதில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சிவி கணேசன், மற்றும் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே என் நேரு கலந்து கொண்டு கட்டுமான தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களை வழங்கினர்.
இந்நிகழ்வில் பேசிய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சிவி கணேசன், தமிழக முதல்வர் தொழிலாளர்களுக்கு ஏற்படும் இன்னல்களை தனக்கு ஏற்பட்ட இன்னலாக கருதி, தொழிலாளர்கள் சாலையில் கொடி பிடித்து கொண்டு போராடாத நிலையை உருவாக்கி உள்ளதாக தெரிவித்தார்.
"இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன்கண் விடல்" என்று குறளுக்கேற்ப அமைச்சர் கே என் நேரு வை நகராட்சி நிர்வாக துறைக்கு முதல்வர் அமைச்சராக்கி உள்ளதாக தெரிவித்தார். இந்த ஆட்சி வந்து ஒரு ஆண்டு காலம் ஆகிறது தொழிலாளர்களை இது வரை யாரும் சந்தித்தது இல்லை யாரும் கோரிக்கைகள் வைத்தது இல்லை. எனினும் அனைவருக்கும் அனைத்து நலத்திட்டங்களும் வழங்கப்படுகிறது என கூறினார்.
நானும் ஒரு தொழிலாளியின் மகன் எனவும் கூறினார். கடந்த அதிமுக ஆட்சியில் 75,000 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படாமல் இருந்ததாகக் கூறிய அவர், முதல்வர் பொறுப்பேற்றவுடன் 25 நாட்களில் 50,000 பேருக்கு உதவித்தொகை அவரவர் வங்கி கணக்கில் செலுத்தியதாக தெரிவித்தார்.
தொழிலாளர் நலத்துறையில் 10 ஆண்டு காலத்தில் முடியாததை 25 நாட்களில் செய்து முடித்தோம் என தெரிவித்தார். கட்டுமான தொழிலாளராக இருந்தாலும், அமைப்புசாரா தொழிலாளர்களாக இருந்தாலும் அவர்களுக்கான நலத்திட்டங்களில் குளறுபடிகள் இருந்தால் எனது கவனத்திற்கோ அல்லது பொன்குமார் கவனத்திற்கோ கொண்டு வந்தால் அது உடனடியாக சரி செய்யப்படும் என தெரிவித்தார்.
முதலில் எல்லாம் யாரேனும் உயிரிழந்தால் 5 ஆண்டுகளுக்கு பணம் போய் சேராமல் இருந்தது என கூறிய அவர் தற்போது எல்லாம் அலுவலர்கள் உடனுக்குடன் பணத்தை தர நடவடிக்கைகள் எடுத்து வருவதாக தெரிவித்தார். மேலும் வீட்டிற்கே அலுவலர்கள் சென்று உதவிகளை வழங்க கூடிய அரசாங்கம் முதல்வரின் அரசாங்கம் என தெரிவித்தார்.