கோவை மாவட்டத்தை சேர்ந்த தங்கவேல், கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பின் நிறுவனர் மணிகண்டன், என்.ஜி.என்.ஜி மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர், பாலசுப்ரமணியன் ஆகிய மூன்று பேருக்கு ஆட்சியர் விருதை வழங்கினார்.
கோவை: தமிழ்நாடு அரசின் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை சார்பில் சுற்றுசூழல் பாதுகாப்பில் சிறந்த பங்களிப்பாற்றியவர்களுக்கு "பசுமை சாம்பியன் விருது" வழங்கப்படுகிறது.
வெற்றி பெறுபவர்களுக்கு, ஒரு லட்சம் ரூபாய் பரிசு தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் அது தொடர்பான துறைகளில் ஆற்றிய பங்களிப்பை கொண்டு இந்த விருது மதிப்பீடு செய்யப்படும் என்றும் தனி நபர்கள், நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், பள்ளி கல்லூரிகள், குடியிருப்போர் நல சங்கங்கள், தொழிற்சாலைகள் ஆகியோர் இந்த விருதிற்கு தகுதியுடையவர்கள் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டது.
அதன்படி, கடந்த மார்ச் மாதம் வரை கோவை மாவட்டத்தில் 33 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மாவட்ட அளவில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவால், அந்த விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, பரிந்துரைக்கப்பட்ட அடிப்படையில் வெற்றி பெற்றவர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
கோவை மாவட்டத்தில், அத்தப்பக்கவுண்டர் கிராமத்தை சேர்ந்த தங்கவேல், கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பின் நிறுவனர் மணிகண்டன், என்.ஜி.என்.ஜி மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர் பாலசுப்ரமணியன் என மூன்று பேருக்கு "பசுமை சாம்பியன் விருது" வழங்கப்பட்டுள்ளது.
இந்த விருதினை, கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ் சமீரன் வழங்கினார். மேலும், தேர்வு செய்யப்பட்ட மூன்று பேருக்கும் தலா 1 லட்சம் ரூபாயும் பரிசு தொகையும் வழங்கப்பட்டடது.
