கோவை பேரூர் அருகே உள்ள தனியார் விவசாய நிலத்திற்குள் 3 குட்டிகளுடன் முகாமிட்டுள்ள 6 காட்டு யானைகளை 11 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு வனத்துறையினர் வனப்பகுதிக்குள் விரட்டினர்.
கோவை: கோவை பேரூர் அருகே உள்ள தனியார் விவசாய நிலத்திற்குள் 3 குட்டிகளுடன் முகாமிட்டுள்ள 6 காட்டு யானைகளை 11 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு வனத்துறையினர் வனப்பகுதிக்குள் விரட்டினர்.
கோவை பேரூர் அடுத்த சென்னனூர் பகுதியில் உள்ள தனியார் விவசாய நிலத்திற்குள் 3 குட்டிகள் உட்பட 6 காட்டு யானைகள் வெள்ளிக்கிழமை நள்ளிரவில் புகுந்தது. இதையடுத்து காட்டு யானைகள் வனப் பகுதிக்குள் செல்லாமல் அதே பகுதியில் முகாமிட்டது.
இதனால் மாவட்ட வன அலுவலர் உத்தரவின் பேரில் போளுவாம்பட்டி, மதுக்கரை, கோவை வனச்சரக வன ஊழியர்கள் சுமார் 30க்கும் மேற்பட்டோர் 3 குழுக்களாக பிரிந்து யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். நேற்று முழுவதும் அதே விவசாய நிலத்தில் இருந்த யானை கூட்டத்தை நள்ளிரவு நேரத்தில் வனப்பகுதியில் விரட்டும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.
இந்நிலையில் நள்ளிரவு 1.30 மணியளவில், மதுக்கரை வனச்சரக கரடிமடை வனப்பகுதிக்குள் காட்டு யானைகள் பத்திரமாக விரட்டப்பட்டது. தொடர்ந்து யானைகள் நடமாட்டத்தையும் வன ஊழியர்கள் கண்காணித்து வருகின்றனர்.