ஆர்.எஸ்.புரம் பகுதியில் தனியார் கடை உரிமையாளர் வீட்டிற்குள் பெண் ஊழியர் உடலில் தீ வைத்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் தொடர்பாக தற்கொலைக்கு தூண்டப்பட்டாரா? அல்லது கொலை முயற்சியா? என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை: கோவையில் தனியார் கடை உரிமையாளர் வீட்டிற்குள் பெண் ஊழியர் உடலில் தீ வைத்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஈரோடு மாவட்டம் பவானி சாலை வர்ணபுரம் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகள் மலர் (37). இவர் நேற்று முன்தினம் கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள நவநீதன் என்பவரது வீட்டிலிருந்த குளியலறைக்குள் சென்று உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றதாக தெரிகிறது.
இதில் 80-சதவீத தீக்காயங்களுடன் அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். தகவலறிந்த ஆர்எஸ்புரம் போலீசார் அரசு மருத்துவமனையில், சிகிச்சையில் உள்ள மலரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் கடந்த 10-ஆண்டுகளுக்கு முன்பு செந்தில் என்பவருடன் திருமணம் நடந்ததாகவும், குழந்தை இல்லாத நிலையில் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 4-ஆண்டுகளுக்கு முன் விவாகரத்து பெற்றுக் கொண்டு, தனது தாய் வீட்டில் வசித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் கடந்த ஆறு வருடமாக ஈரோடு மாவட்டம் பவானியில் உள்ள நவநீதன் என்பவருக்கு சொந்தமான சிமெண்ட் மற்றும் டைல்ஸ் கடையில் வேலை செய்து வந்ததாகவும், இதற்காக வாரம் ரூ.1500 ஊதியம் பெற்று வந்ததாகவும் தெரிவித்தார்.
இந்நிலையில், நீண்ட நாட்களாக அவருக்கு வயிற்று வலி இருந்ததால் சிகிச்சைக்கு போதிய பணம் இல்லாமல் சிரமப்பட்டு வருவதாகவும், இதனால் சிகிச்சைக்கு பணம் வேண்டும் என நவநீதனிடம் கேட்ட நிலையில், அவர் நீண்ட நாட்களாக தரவில்லை என தெரிவித்துள்ளார்.
மேலும் இதுகுறித்து நேரில் பேச கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள நவநீதன் வீட்டிற்கு வந்த மலர் சுமார் 45 நிமிடம் நவநீதன் மற்றும் அவரது மனைவி அகிலாவிடம் பேசியுள்ளார்.
இதையடுத்து முதல் கட்டமாக சிகிச்சைக்கு ரூ.50,000 தயார் செய்து தருவதாக உறுதி அளித்த நிலையில், கையில் பணம் கிடைக்காத மன உளைச்சலிலிருந்த மலர், நவநீதன் வீட்டிலிருந்த குளியலறைக்குச் சென்று தான் ஏற்கனவே எடுத்துவந்த மண்ணெண்ணையை உடலில் ஊற்றி தீப்பெட்டி கொண்டதாகத் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து மலர் மீது 309-சட்டப்பிரிவு தற்கொலைக்கு முயன்ற பிரிவின்கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் நவநீதனிடமும் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே பலத்த தீக்காயத்துடன் மலருக்கு கோவை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதனிடைய மலரின் உறவினர்கள் இந்த சம்பவத்தில் சந்தேகம் உள்ளதாக கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்க வந்தனர். அப்போது மலரை திட்டமிட்டு தீ வைத்து கொல்ல முயன்றுள்ளதாகவும், மலருக்கு கடை உரிமையாளர் நவநீதன் பாலியல் தொல்லையளித்து வந்ததாகவும் தெரிவித்துள்ளனர். உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.