பல மாதங்களாக குடியிருப்புகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் எடுக்காததால் குடியிருப்பு முழுவதும் குப்பை மேடாக காட்சியளிக்கிறது. இதனால் நோய் தொற்று பரவி அவ்வப்போது உடல் நல குறைவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
கோவை: கீரணத்தம் ஊராட்சியில் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் குப்பை தொட்டிகள் அமைத்து தினமும் அப்பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திடம் அப்பகுதிவாசிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
கோவை மாவட்டம் சரவணம்பட்டி அடுத்த கீரணத்தம் ஊராட்சியில்குடிசை மாற்று வாரிய குடியிருப்பு அமைந்துள்ளது. இந்த குடியிருப்பில் சுமார் 1,260 குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
கோவை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் ஆக்கிரமிப்பு இடங்களில் வசித்து வந்த பொதுமக்கள் இந்த குடியிருப்புக்கு மாற்றப்பட்டுள்ளனர். இந்நிலையில், 3 ஆண்டுகளுக்கு மேலாக இந்த குடியிருப்பில் பொதுமக்கள் வசித்து வரும் நிலையில் பல்வேறு அடிப்படை வசதிகளுக்கு மிகவும் சிரமப்பட்டு வருவதாக குடியிருப்பு வாசிகள் தெரிவித்துள்ளனர்.
பெரும்பாலும் தூய்மைப் பணியாளர்கள் அங்கு வசித்து வரும் நிலையில், தங்களது குடியிருப்பில் சுகாதாரம் இல்லாமல் இருப்பது வேதனை அளிப்பதாகத் தெரிவிக்கின்றனர். இந்த புதிய குடியிருப்புகளுக்கு வந்து மூன்று ஆண்டுகள் ஆகியும் இதுவரை வாக்காளர் அட்டை அல்லது முகவரிமாற்றப்பட்டதற்கான எந்த சான்றிதழும் வழங்கவில்லை எனவும் இதனால் தாங்கள் தேர்தல்களில் வாக்களிப்பது இல்லை என தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், பல மாதங்களாகக் குடியிருப்புகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் எடுக்காததால் குடியிருப்பு முழுவதும் குப்பை மேடாக காட்சியளிக்கிறது. இதனால் நோய் தொற்று பரவி அவ்வப்போது உடல் நல குறைவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
மேலும், அந்த குப்பைகளை வேறுவழியின்றி அவ்வப்போது தீ வைத்து அழிப்பதால், அதிலிருந்து வெளியேறும் நச்சு புகை பெரும்பாலானோருக்கு நுரையீரல் பாதிப்பை ஏற்படுத்துகிறது. மேலும் குப்பை மேட்டில் வைக்கப்படும் தீயால் அங்கு இருக்கக்கூடிய மின்கம்பங்களில் தீ விபத்து ஏற்படுவதற்கான அபாயமும் உள்ளது.
தொடர்ந்து பலமுறை குடியிருப்பில் இருக்கும் பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு தெரிவித்தும் இதுவரை அங்குள்ள குப்பைகள் அகற்றப்படாமல் குப்பைகள் நிறைந்த தீவாக குடிசை மாற்று வாரிய குடியிருப்பு காட்சியளிக்கிறது. மேலும் அந்த குடியிருப்பில் தூய்மைப் பணியாளர்கள் அதிக அளவில் வசித்து வருகின்றனர்.
பல்வேறு பகுதிகளில் சேரும் குப்பைகளை அகற்றி தூய்மையாக வைத்திருக்கும் அவர்களின் குடியிருப்புக்கு இந்த மோசமான நிலை ஏற்பட்டுள்ளது. நாங்கள் தூய்மைப் பணியில் எந்த பாரபட்சமும் இன்றி பணியாற்றுகிறோம் ஆனால் எங்கள் பகுதியில் தூய்மைப் பணியை மேற்கொள்ள யாரும் வருவதில்லை என தெரிவிக்கின்றனர்.
உடனடியாக மாவட்ட நிர்வாகம் தலையிட்டு நீண்ட நாட்களாக சேர்ந்து கிடக்கும் குப்பைகளை அகற்ற வேண்டும், குப்பை தொட்டிகள் அமைத்து தினமும் அப்பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.