பல்வேறு இடங்களில் நீதிமன்றம் நிர்ணயித்துள்ள நேரத்தை தாண்டி மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதை மாவட்ட நிர்வாகம் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென பாட்டாளி மக்கள் கட்சியினர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
கோவை: நீதிமன்றம் நிர்ணயித்துள்ள நேரத்தை தாண்டி பல்வேறு இடங்களில் மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாகவும், இதனை மாவட்ட நிர்வாகம் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென பாட்டாளி மக்கள் கட்சியினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
கோவை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் டாஸ்மாக் கடைகள் நீதிமன்றம் நிர்ணயித்துள்ள நேரங்களை (பகல் 12 முதல் இரவு 10) மீறி அதிகாலை முதல் நள்ளிரவு வரை திறந்து வைத்து விற்பனை நடைபெறுவதாகவும், வயது வரம்பின்றி பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு இடங்களில் விற்பனை செய்யப்படுவதாகவும், இதனை மாவட்ட நிர்வாகம் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென பாட்டாளி மக்கள் கட்சியினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
கோவை மாவட்ட செயலாளர் ராஜகோபால் தலைமையில் மனு அளிக்க வந்தவர்கள் பள்ளி மாணவர்களுக்கு மது விற்பனை செய்யப்படுவதால், வகுப்பறைகள் மற்றும் பொது இடங்களில் ஒழுங்கீன பிரச்சினை ஏற்படுவதாகவும், இதனைத் தடுக்க வேண்டும் எனவும், டாஸ்மாக் கொள்முதல் செய்யும் மது வகைகளின் தரம் அடிக்கடி பரிசோதிக்கப்படுகிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டனர்.