பேரூராட்சி அலுவலகத்தில் எந்த அனுமதியும் இல்லாமல் எப்படி பிரதமர் புகைப்படத்தை வைக்கலாம்? என கேள்வி எழுப்பியுள்ள திமுகவினர், அனுமதி பெற்று வந்து பிரதமர் படத்தை வைத்துக் கொள்ளுமாறு தெரிவித்துள்ளார்.
கோவை: கோவை வெள்ளலூர் பேரூராட்சி அலுவலகத்தில் மாட்டப்பட்டிருந்த பிரதமர் மோடி புகைப்படத்தை திமுகவினர் அகற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.
நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கோவை மாவட்டத்தில் வெள்ளலூர் பேரூராட்சியை அதிமுக கைப்பற்றியது. அதிமுகவை சேர்ந்த மருதாசலம் என்பவர் பேரூராட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
இந்நிலையில் இன்று வெள்ளலூர் பேரூராட்சி அலுவலகத்திற்கு வந்த பாஜகவினர், பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படத்தை மாட்டியுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த திமுகவினர் அப்படத்தை அகற்ற வேண்டுமென வலியுறுத்தினர். அப்போது திமுக கவுன்சிலர் கனகராஜ் பேரூராட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டு இருந்த பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படத்தை அகற்றினார்.
ஆட்சியர் அலுவலகம் உட்பட அரசு அலுவலகங்களிலேயே பிரதமர் மோடியின் புகைப்படம் வைக்கப்படுவதில்லை என்ற போது விடுமுறை நாளான இன்று அனுமதியின்றி பாஜகவினர் பேரூராட்சி அலுவலகத்தில் பிரதமர் மோடியின் புகைப்படத்தை வைத்துச் சென்றுள்ளதாக கனகராஜ் தெரிவித்துள்ளார்.
மேலும் பேரூராட்சி அலுவலகத்தில் எந்த அனுமதியும் இல்லாமல் எப்படி பிரதமர் மோடியின் புகைப்படத்தை வைக்கலாம்? என கேள்வி எழுப்பியுள்ள அவர் அனுமதி பெற்று வந்து பிரதமர் மோடியின் படத்தை வைத்துக் கொள்ளுமாறு கூறியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதனிடையே, பாஜகவினர் பேரூராட்சி தலைவர் அனுமதியுடன் தான் புகைப்படம் வைத்ததாக கூறியுள்ளனர். ஆனால் இது குறித்து திமுக வினர் பேரூராட்சி தலைவரிடம் கேட்கும் போது அவர் முறையாக பதிலளிக்கவில்லை என தெரிவித்துள்ளனர்.