மண் வளப் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக 27 தன்னார்வலர்கள் பெங்களூருவில் இருந்து சுமார் 420 கி.மீ சைக்கிளில் பயணித்து இன்று (ஏப்ரல் 15) கோவை வந்தடைந்தனர்.
கோவை: மண் வளப் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக 27 தன்னார்வலர்கள் பெங்களூருவில் இருந்து சுமார் 420 கி.மீ சைக்கிளில் பயணித்து இன்று (ஏப்ரல் 15) கோவை வந்தடைந்தனர்.
'பெடல் புஸ்ஸர்ஸ்' என பெயரிடப்பட்டுள்ள இந்த குழுவில் முன்னாள் ராணுவ வீரர்கள், ஐ.டி நிறுவன ஊழியர்கள், மருத்துவ துறையைச் சேர்ந்தவர்கள் என பல தரப்பினர் இடம்பெற்றுள்ளனர். சத்குரு தொடங்கியுள்ள மண் காப்போம் இயக்கத்திற்கு ஆதரவாக இந்த விழிப்புணர்வு பேரணியை அவர்கள் மேற்கொண்டுள்ளனர்.
இது தொடர்பாக அதில் பங்கேற்ற தன்னார்வலர்கள் கூறியதாவது:
தமிழ்நாடு மட்டுமின்றி உலகளவில் மண் வளம் மிக வேகமாக குறைந்து வருகிறது. மண்ணில் குறைந்தப்பட்சம் 3 சதவீதம் கரிம வளம் இருந்தால் தான் அதை மண் என அழைக்க முடியும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். ஆனால், தமிழ்நாடு உட்பட பல மாநிலங்களில் அதன் அளவு 0.5 சதவீதத்திற்கும் குறைவாக உள்ளது.
இதே நிலை, நீடித்தால் அடுத்த 40 - 50 ஆண்டுகளில் நாம் விவசாயமே செய்ய முடியாது என விஞ்ஞானிகளும், ஐ.நா ஆய்வுகளும் கூறுகின்றன. எனவே, மண் வளத்தை பாதுகாக்க உலக நாடுகள் உரிய சட்டங்களை இயற்ற வேண்டும் என வலியுறுத்தி ஈஷா நிறுவனர் சத்குரு அவர்கள் மண் காப்போம் என்ற இயக்கத்தை தொடங்கி உள்ளார்.
இதற்காக, அவர் 65 வயதில் லண்டன் முதல் தமிழ்நாடு வரை 27 நாடுகளுக்கு 30,000 கி.மீ மோட்டார் சைக்கிளில் பயணித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.
இவ்வியக்கத்திற்கு ஐ.நாவின் பாலைவனமாதலை தடுக்கும் அமைப்பு (UNCCD), ஐ.நா. சுற்றுச்சூழல் அளமப்பு (UNEP), உலக உணவு அமைப்பு (WFP) மற்றும் இயற்கை பாதுகாப்பிற்கான சர்வதேச கூட்டமைப்பு உள்ளிட்ட சர்வதேச அமைப்புகள் ஏற்கனவே ஆதரவு தெரிவித்துள்ளன.
எனவே சத்குருவின் இந்த பயணம் உலகளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். இவ்வாறு அவர்கள் கூறினார்.
இந்தப் பேரணியை இசை அமைப்பாளர் சந்தன் செட்டி மற்றும் நடிகை நிவேத கவுடா ஆகியோர் ஏப்ரல் 13-ம் தேதி பெங்களூருவில் கொடி அசைத்து தொடங்கி வைத்தனர். அங்கிருந்து சைக்கிளில் புறப்பட்ட இக்குழுவினர் ஓசூர், கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு வழியாக கோவைக்கு வந்து ஈஷா யோகா மையத்தில் தங்கள் பயணத்தை நிறைவு செய்தனர்.