எழுதுகிற முயற்சியானது, அன்றாட பயிற்சியாக நம்மிடயே தொடர்ந்தால், நல்ல இலக்கியங்களைப் படைக்கலாம்; இலக்கியங்கள் வழியாகக் காலத்தை வென்று வாழலாம் என அறிவுறுத்தினார்.
பத்மஸ்ரீ சிற்பி பாலசுப்ரமணியனாருக்கு கோயம்புத்தூர் கற்பகம் கல்வி நிறுவனங்களின் சார்பில் பாராட்டு விழாவானது, கற்பகம் பல்கலைக்கழக வளாகத்தில் 11.04.2022, திங்களன்று கொண்டாடப்பட்டது.
கவிஞர் சிற்பி, தமது துணைவியாருடன் விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்தார். கற்பகம் கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர் இராச. வசந்தகுமார் பாராட்டு விழாவுக்குத் தலைமை வகித்தார்.
மாணவர்கள், கவிஞர் சிற்பியைப்போல அவரவருக்கும் ஆர்வமான துறையை இளம் வயதிலேயே தேர்ந்தெடுத்து, அத்துறையில் தமது தனித்திறன்களைத் தொடர்ந்து வளர்த்துக் கொள்ளவேண்டும்; அறிவியலும், வணிகவியலும், தொழில்நுட்பக்கல்வியும் வாழ்க்கைக்குரிய பொருள் செல்வத்தைத் தரலாம்; ஆனால், 'தமிழே மனிதர்கள் உள்ளும் புறமும் ஒருசேரப் பண்படுகிற உயர்வைத் தரும்!', மாணவர்கள் அதை உணர்ந்து, தமிழைச் சிக்கெனப் பிடித்துக்கொண்டால் அறிவிலும், ஆளுமையிலும் ஒருசேர உயரலாம்; அத்தகைய முயற்சிக்குக் கவிஞர் சிற்பி அவர்களின் கவிதைகள் முதலான இலக்கியப் படைப்புகள் என்றும் துணையாகும் என்பதை அறிவுறுத்தினார்.
விழாவிற்கு, கற்பகம் கல்வி நிறுவனங்களின் முதன்மைச் செயல் அலுவலர் க. முருகையா மற்றும் கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தின் பதிவாளர் டாக்டர் மு. பழனிச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தர் டாக்டர் 7. குழந்தைவேல், கவிஞர் சிற்பி அவர்களுடன் கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக்கழகத்தில் இணைந்து பணியாற்றிய அனுபவங்களையும், கவிஞரது சிறந்த ஆளுமை மிகுந்த வெளிப்பாடுகளையும், சாகித்ய அகாடமி வாயிலாக கவிஞர் சிற்பி ஆற்றுகிற பணிகளையும் பாராட்டி மகிழ்ந்தார்.
கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் டாக்டர் சேது. சுடலைமுத்து தமது வாழ்த்துரையில், கவிஞர் சிற்பியின் இலக்கியப்படைப்புகள், கவிதை இலக்கியம், புதின இலக்கியம், கவிதை நாடக இலக்கியம், மொழிபெயர்ப்பு இலக்கியம், சிறுவர் இலக்கியம், உரைநடை இலக்கியம் என்று பன்முகத்தன்மை கொண்டு விளங்குவதைச் சுட்டிக்காட்டினார்.
அவரது இலக்கியப் படைப்புகள் கொங்கு மண்ணைச் சார்ந்தமைந்து எளிமையும், அழகும், ஆழமும், நுட்பமும் கொண்டு தனித்துவத்துடன் விளங்குவதை மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.
விழாவில் பத்மஸ்ரீ கவிஞர் சிற்பி பாலசுப்ரமணியன் ஏற்புரை வழங்கினார். தமது பள்ளிக்கல்வியானது கேரளத்து மண்ணில் அமைந்த சூழலை மாணவர்களுக்குச் சுவைப்பட எடுத்துரைத்தார். திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் இளநிலைக் கல்வி பயின்றதைக் குறிப்பிட்டார். தாம், சிறந்த தமிழ் நாவன்மையர்கள் என்று போற்றுகிற பேராசிரியர்களாக அப்துல்கஃபூர், சீனிவாசராகவன் மற்றும் ரா.பி. சேதுப்பிள்ளை ஆகியோரைக் குறிப்பிட்டார்.
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்ற நாளில் அங்கிருந்த பேராசிரியர், சிதம்பரநாதன் ஆளுமையால் கவரப்பட்டு, தாமும் பின்னாளில் அவரைபோன்றே ஆளுமை மிகுந்த பேராசிரியராக வாழ்க்கையை அமைத்துக்கொள்ள ஆர்வம் கொண்டதைச் சுட்டிக்காட்டினார்.
அங்கு கவிஞர் மு.அண்ணாமலை அவர்களிடமிருந்து கவிதைப் படைப்புக்கான உத்திகளைக் கற்றுக்கொண்டதாகக் குறிப்பிட்டார். அதே பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய பேராசிரியர் மீனாட்சி சுந்தரனாரிடமிருந்து வாழ்க்கைக்கான மனித மதிப்புகளைக் கற்றுக்கொண்டதை நினைவுகூர்ந்தார்.
மூன்றாவது முறையாகவும் சாகித்ய அகாடமியின் தலைவராகச் செயல்படுகின்ற வாய்ப்பில், மகாகவி பாரதியாரின் கவிதைகளை ஆங்கில மொழிபெயர்ப்பாக வெளிக்கொண்டு வந்துள்ளதையும், புதிய இலக்கிய வரலாற்று நூலின் ஆக்கப் பணிகளையும் சுட்டிக்காட்டினார்.
மாணவர்கள், படைப்பிலக்கியங்களில் ஆர்வம் செலுத்த மேலும் அறிவுறுத்தினார். எழுதுவது என்பது, மிகச்சிறந்த கலை; அதற்கு இலக்கிய வாசிப்பே அடிப்படை; குறிப்பிட்ட இலக்கிய வடிவிலான இலக்கியங்களைத் தொடர்ந்து வாசித்தால், அவ்விலக்கிய வடிவத்துக்குரிய உத்திகள் வாசகனின் மனதில் ஆழப்பதிகின்றன. அதனால், அவனது கருத்து வெளிப்பாடும் குறிப்பிட்ட இலக்கியமாகவே அமைகின்றன. மாணவர்கள் இதனை உணர்ந்தால் சிறந்த கவிஞர்களாகவும், இலக்கியப் படைப்பாளிகளாகவும் மேம்படலாம் என்றார்.
எழுதுகிற முயற்சியானது, அன்றாடப் பயிற்சியாக நம்மிடயே தொடர்ந்தால், நல்ல இலக்கியங்களைப் படைக்கலாம்; இலக்கியங்கள் வழியாகக் காலத்தை வென்று வாழலாம் என்றார். மாணவர்கள், அதற்கு அடிப்படையாக, தரமான இலக்கிய வாசிப்பை வழக்கமாகக் கொள்ளவேண்டும்' என்று அறிவுறுத்தினார்.
மாணவர்களின் உள்ளத்தில் அத்தகைய உயர்ந்த நோக்கத்தை விதைப்பதற்கு இப்பாராட்டு விழாவானது காரணமாக அமைந்ததை எண்ணி மகிழ்வதாகக் கூறினார்.
கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தர் டாக்டர் K.இராமசாமி இப்பாராட்டு விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்தார். அதனால், மூன்று பெரும் துணைவேந்தர்கள் கூடி பத்மஸ்ரீ கவிஞர் சிற்பி அவர்களுக்குக் கொண்டாடிய பாராட்டு விழாவாக இவ்விழா அமைந்தது குறிப்பிடத்தக்கது.
இவ்விழாவினை கற்பகம் கல்வி நிறுவனங்களின் முதன்மைச் செயல் அலுவலர் ௧.முருகையா தலைமையின் கீழ், மாணவர் நலன் முதன்மையர் முனைவர் ப.தமிழரசி உள்ளிட்ட தமிழ்த்துறைப் பேராசிரியர்கள் ஒருங்கிணைத்தனர்.
