கோவை விமான நிலையத்தில் பெட்ரோல், டீசல் விலைக்கு இணையாக விற்கப்படும் இரண்டு இட்லி மற்றும் உணவு பொருட்கள் விலையை குறைக்க பிரதமருக்கு கோவை சேர்ந்த பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை: கோவை நகரில் உள்ள உணவகங்களில் விற்பனை செய்யப்படும் இரண்டு இட்லி விலையுடன் ஒப்பிடுகையில் விமான நிலையத்தில் 60% கூடுதல் விலைக்கு இரண்டு இட்லி விற்பனை செய்யப்படுவதாக கூறிவிலையை குறைக்க பிரதமருக்கு கோவை சேர்ந்த பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை சர்வதேச விமான நிலையம் கோவை மற்றும் சுற்றுப்புறங்களை சேர்ந்த 7 மாவட்ட மக்களுக்கு பயனளித்து வருகிறது. உள்நாட்டின் பல்வேறு நகரங்களுக்கும், மூன்று சர்வதேச நாடுகளுக்கும் விமான சேவை வழங்கப்படுகிறது.
ஆண்டுதோறும் 30 லட்சம் பயணிகள் கோவை விமான நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர். பயணிகள் வசதிக்காக பல்வேறு வகையான உணவுப் பொருட்கள் விற்பனை செய்யும் நிறுவனங்கள் கடை அமைப்பதற்கான இடங்களுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் பேரில் அதற்கான தொகை செலுத்திசெயல்பட்டு வருகின்றன.
இவ்வாறு செயல்படும் உணவகங்களில் விற்பனை செய்யப்படும் பொருட்களின் விலை தாறுமாறாக அதிகரித்துள்ளது என்றும் கோவை விமான நிலையம் குறித்து தெரிவிக்கப்படும் இந்த புகாரை தொடர்ந்து நாட்டில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் உணவுப்பொருட்கள் பயணிகளுக்கு குறைந்த விலையில் விற்பனை செய்வதை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கபிரதமருக்கு கோவை சேர்ந்த பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை தங்க நகை தயாரிப்பாளர்கள் சங்கத்தின், தலைவர், முத்து வெங்கட்ராம் கூறியதாவது:-
தொழில் காரணமாக அடிக்கடி விமானத்தில் பல்வேறு நகரங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் சென்று வருவது வழக்கம். கோவை விமான நிலையத்தில் செயல்படும் உணவகங்களில் விற்பனை செய்யப்படும் உணவு பொருட்கள் விலை மிகவும் அதிகமாகக் காணப்படுகிறது.
ஒரு செட் இட்லி நூறு ரூபாய்க்கு விற்பனை செய்யபடுகிறது. கோவை நகரில் உள்ள உணவகங்களில் விற்பனை செய்யப்படும் இரண்டு இட்லி விலையுடன் ஒப்பிடுகையில் விமான நிலையத்தில் 60% கூடுதல் விலைக்கு இரண்டு இட்லி விற்பனை செய்யப்படுகின்றன.
இதுகுறித்து உணவக அதிகாரிகளிடம் கேட்டபோது மிக அதிக வாடகை கொடுக்க வேண்டி உள்ளதால் இந்த கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது என அவர்கள் தரப்பு நியாயத்தை தெரிவிக்கின்றனர்.
முன்பு செல்வந்தர்கள் மட்டுமே விமான பயணம் மேற்கொள்ள முடியும் என்ற நிலை இருந்தது. ஆனால் தற்பொழுது நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்களும் விமான பயணம் மேற்கொள்ளும் வகையில் விமான போக்குவரத்து துறை வளர்ச்சி அடைந்துள்ளது. எனவே இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு நடுத்தர மக்கள் விமான நிலையங்களில் நியாயமான விலையில் உணவுப் பொருட்களை பெற்று, உட்கொள்ள மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கோவையில் நாங்கள் அளித்துள்ள இந்த புகாரை எடுத்துக்காட்டாக வைத்துக் கொண்டு நாட்டில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் ஆய்வு மேற்கொண்டு உணவு பொருட்கள் விலை குறைந்த விலைக்கு விற்பனை செய்வதை உறுதி செய்ய வேண்டும் என பிரதமருக்கும், மத்திய சிவில் விமானப் போக்குவரத்து துறை அமைச்சருக்கும் கோரிக்கை கடிதம் அனுப்பி உள்ளோம். அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலைக்கு இணையாக கோவை விமான நிலையத்தில் இரண்டு இட்லி விற்பனை செய்யப்படுவது ஏற்புடையது அல்ல. விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே எங்கள் எதிர்பார்ப்பு.
இவ்வாறு அவர் கூறினார்.
சிட்டிசன்ஸ் வாய்ஸ் கோயம்புத்தூர் அமைப்பின், தலைவர், ஜெயராமன் கூறியதாவது:-

விமானத்தில் பயணம் செய்யும்போது பயணிகள் தங்களுடன் புளிசாதமோ, தயிர்சாதம் அல்லது வேறு ஏதேனும் உணவு பொருட்களை தங்களுடன் கட்டி எடுத்துச் செல்ல முடியாது. எனவே விமான நிலையங்களில் உள்ள உணவகங்கள் தான் அவர்களுக்கு உணவு தேவையை பூர்த்தி செய்வதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
இந்திய விமான நிலையங்கள் ஆணையம் சார்பில் நிர்வகிக்கப்படும் விமான நிலையங்கள் மற்றும் தனியாருக்கு பராமரிக்க அனுமதிக்கப்பட்டுள்ள விமான நிலையங்களிலும் உணவு பொருட்கள் அனைத்தும் குறைந்த விலையில் பயணிகளுக்கு கிடைக்க உதவும் வகையில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிக பணம் கொடுத்து சாப்பிட விரும்பும் செல்வந்தர்களுக்கு ஏற்ற உணவகங்களையும் தனியாக அமைக்க நடவடிக்கை எடுக்கலாம். இப்பிரச்சினை குறித்து ஆய்வு செய்து தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பயணிகளின் எதிர்பார்ப்பாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.