1993 ஆம் ஆண்டு, ஆர்.டி.எஸ் வெடிமருந்துகளுடன் இந்தியாவுக்குள் நுழைய முயன்ற 10-க்கும் மேற்பட்ட தீவிரவாத கும்பலை தடுத்து நிறுத்த முற்பட்ட போது, அதில் தீவிரவாதிகளை கண்ணாளன் கென்னடி சுட்டு வீழ்த்தி, வீர மரணம் அடைந்தார்.
கோவை: கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் அருகில் உள்ள நாயக்கன்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணாளன் கென்னடி. ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் வெங்கிடபெருமாள் - மங்குத்தாய் தம்பதியினரின் 4 வது மகனான இவர், 1984 ஆண்டு நம்பர் 25 மெட்ராஸ் ரெஜிமெண்ட் இராணுவத்தில் சேர்ந்து திருவனந்தபுரம் மற்றும் இலங்கை அமைதிப்படையில் பணியாற்றினார்.
தொடர்ந்து, ஜம்மு-காஷ்மீர் பகுதியில் எல்லை பாதுகாப்பு படைப்பிரிவில் இந்தியா பாகிஸ்தான் எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில், கடந்த 1993 ஆம் ஆண்டு, ஆர்.டி.எஸ் வெடிமருந்துகளுடன் இந்தியாவுக்குள் நுழைய முயன்ற 10-க்கும் மேற்பட்ட திவிரவாத கும்பலை தடுத்து நிறுத்த முற்பட்ட போது, அதில் தீவிரவாதிகளை கண்ணாளன் கென்னடி சுட்டு வீழ்த்தினார்.
இதில், மற்ற தீவிரவாதிகளால் சுடப்பட்டு, தலையில் குண்டு காயம் ஏற்பட்டு அங்கேயே வீரமரணமும் அடைந்தார். வீரமரணம் அடைந்த கண்ணாளன் கென்னடிக்கு அவரது வீரச்செயல்களைப் பாராட்டி இந்திய இராணுவத்தின் உயரிய விருதான "கீர்த்தி சக்ரா" விருது 1994ல் அப்போதைய ஜனாதிபதி டாக்டர். சங்கர்தயாள் சர்மா கென்னடியின் தாயாரிடம் வழங்கினார்.
கென்னடியின் நினைவாக நாயக்கன்பாளையத்தில் உள்ள அவரது வீட்டு தோட்டத்தில் மணிமண்டபம் கட்டப்பட்டு, அதில் அவரது படங்கள், உடைகள், இராணுவத்தால் வழங்கப்பட்ட கேடயங்கள் ஆகியன பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. இவற்றை அப்பகுதி மாணவர்கள், பொதுமக்கள் பார்வையிட்டு செல்வர்.
இந்த நிலையில், 29-வது ஆண்டு நினைவு நாளில் குன்னூர் வெலிங்டன் படைப்பிரிவுகளை சேர்ந்த ராணுவ வீரர்கள் நாயக்கன்பாளையத்தில் உள்ள கண்ணாளன் கென்னடியின் நினைவு தினமான ஏப்ரல் 11ம் தேதி அவரது நினைவிடத்திற்கு வந்து இராணுவ மரியாதையுடன் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
வரும் 23ம் தேதி மேகாலயாவில் ராணுவ அலுவலகத்தில் "கீர்த்தி சக்ரா" விருது பெற்ற கண்ணாளன் கென்னடியின் உருவசிலை திறக்கப்படுகிறது என்பது கூடுதல் சிறப்பு.
இந்நிலையில், இன்று நடைபெற்ற அஞ்சலி நிகழ்ச்சியில் அவர் சகோதரர்கள் செல்வநம்பி, அண்ணாதுரை, குப்பு ஜெயம், பார்த்தசாரதி பிரபு, சகோதரி டாக்டர்.புவனேஷ்வரி, ராணுவ வீரர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள், பள்ளி மாணவ மாணவிகள், கென்னடி குடும்பத்தினர், நாயக்கன்பாளையம் ஊர் பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
தொடர்ந்து, அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. பின்னர், அஞ்சலி நிகழ்ச்சியானது ராணுவ மரியாதையுடன் நடத்தப்பட்டது.