இதையடுத்து அங்கிருந்த சக ஊழியர்கள் குப்பைகளுக்கு இடையே சிக்கிய பெண் ஊழியரை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் அவர் அதற்குள் மூச்சி திணறி உயிரிழந்தார்.
கோவை: கோவை வெள்ளலூர் குப்பை கிடங்கில் குப்பைகளின் இடையே பெண் ஊழியர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை வெள்ளலூர் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் முருகன் இவரது மனைவி சிவகாமி (52). இவர்களுக்கு 3 பெண்கள் உள்ளிட்ட 4 குழந்தைகள் உள்ளனர். மேலும், சிவகாமி வெள்ளலூர் குப்பை கிடங்கில் குப்பைகளில் உள்ள பிளாஸ்டிக் கழிவுகளை பிரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தார்.
இந்நிலையில், இன்று காலை வழக்கம்போல் சிவகாமி மற்றும் அவரது மகன் பொன்னி இருவரும் வெள்ளலூர் குப்பை கிடங்கில் பிளாஸ்டிக் கழிவுகளை தரம் பிரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது பணியில் இருந்த சிவகாமி திடீரென மாயமானதாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் மகள் பொன்னி, சக ஊழியர்களுடன் சேர்ந்து அப்பகுதியில் உள்ள குப்பைகளில் சோதனை செய்தனர்.
அப்போது, குப்பைக்கிடங்கில் ஒரு பகுதியில் குப்பைகளின் இடையே அவரது கால் மட்டும் வெளியே தெரிந்துள்ளது. இதையடுத்து சக ஊழியர்கள் சுயநினைவு இழந்த நிலையில் சிவகாமியை மீட்டனர்.
இதனிடையே, தகவல் அறிந்து அங்கு வந்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் சிவகாமியை சோதனை செய்தபோது அவர் ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்தது. இதையடுத்து, அங்கு வந்த போத்தனூர் போலீசார் சிவகாமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
முதல் கட்ட விசாரணையில் சிவகாமி கீழே அமர்ந்து குப்பைகளை பிரித்த போது அங்கு இரண்டு டிப்பர் லாரிகளில் கொண்டு வந்த குப்பையை கொட்டும் போது தவறுதலாக அதில் சிக்கி உயிரிழந்தாரா? அல்லது வெயிலின் தாக்கத்தால் அவர் மயங்கி விழுந்தது தெரியாமல் அவரது மீது குப்பை கொட்டப்பட்டதா..? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.