ரஷ்யாவில் பயப்படும்படி எதுவும் இல்லை என்றும், பெற்றோர்கள் அச்சப்படுவதன் காரணமாகவே வந்ததாகவும் மாணவர்கள் பேட்டி.
கோவை: ரஷ்யா- உக்ரைன் போர் காரணமாக ரஷ்யாவிலிருந்து விடுப்பில் கோவை மாணவர்கள் ஊர் திரும்பியுள்ளனர்.
ரஷ்யா - உக்ரைன் இடையே போர் நடைபெற்று வரும் நிலையில் உக்ரைன் நாட்டிலிருந்து இந்திய மாணவர்கள் இந்தியா திரும்பி வருகின்றனர்.
இந்நிலையில், ரஷ்யா நாட்டு எல்லையில் உள்ள கிரிமியா பல்கலைக்கழகத்தில் படிக்கும் இந்திய மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கும்படி இந்திய மாணவர்களின் பெற்றோர் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.
இதனையடுத்து, கிரிமியா பல்கலைக்கழகம், ஊருக்குச் செல்ல விரும்பும் இந்திய மாணவர்கள் ஊருக்குச் செல்லலாம் என அனுமதி அளித்தது.
அனுமதியை அடுத்து கோவையைச் சேர்ந்த மாணவர்கள் புவனேஷ் கார்த்திக், டீனா ஜெனிபர் ஆகியோர் விமானம் மூலம் கோவை வந்தடைந்தனர்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர்கள் கூறுகையில்,
ரஷ்யா போரில் ஈடுபட்டு இருப்பதால் பெற்றோர் பயப்படுவதாகவும், அவர்கள் அழுத்தம் காரணமாகவே ஊர் திரும்பியதாகவும் தெரிவித்தனர். கிரிமியா பல்கலைக்கழகத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வரும் நிலையில் 70க்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்தியா திரும்பி இருப்பதாகவும் கூறினர்.
ரஷ்யாவில் கிரிமியா பல்கலையில் மட்டுமே இந்திய மாணவர்கள் விருப்பப்பட்டால் ஊருக்குச் செல்லலாம் என அறிவித்திருப்பதாகவும், ஆன்லைன் மூலம் படிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தனர்.
மேலும், ரஷ்யாவில் பயப்படும்படி எதுவும் இல்லை என்றும் பெற்றோர்கள் அச்சப்படுவதன் காரணமாகவே வந்ததாக தெரிவித்தனர்.