மேலும், நாடு திரும்பியுள்ள மருத்துவ மாணவர்களின் கடனை ரத்து செய்யவேண்டும் அல்லது ஒத்தி வைக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
கோவை: உக்ரைனில் இருந்து நாடு திரும்பும் வட இந்திய மாணவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கும் விவகாரம் குறித்து வெளியுறவுத் துறை அமைச்சர் விளக்கமளிக்க வேண்டும் என்று கார்த்திக் சிதம்பரம் பேட்டி அளித்துள்ளார்.
இதுகுறித்து சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் கோவை விமானநிலையத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
திமுக தலைமையிலான அரசு 9 மாதங்களாக சிறப்பாக, வெளிப்படையாக செயல்படுகின்றது என தெரிவித்தார். 5 மாநில கருத்துக் கணிப்பு என்பது சாப்பிடாமல் சாப்பாட்டினை வர்ணிப்பது போல, எனவே கருத்துக்கணிப்பை வைத்து முடிவுக்கு வர முடியாது.
கடந்த முறை மேற்கு வங்கத்தில் பாஜக வெற்றி பெரும் என்ற கருத்துக்கணிப்பு பொய்யானது என கூறிய அவர் நாளை முடிவுகளை பார்க்கலாம் என தெரிவித்தார்.
உக்ரைனில் இருந்து தமிழகம் திரும்பியுள்ள மாணவர்களுக்கு கல்வி கற்பதில் கண்டிப்பாக பாதிப்பு வரும். சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் 30 பேர் உள்ளனர். ஆனால் 13 பேர் மட்டுமே இது வரை வந்துள்ளனர்.
மருத்துவ படிப்பில் பாதியில் இருத்து வந்திருக்கின்ற மாணவர்கள் மீண்டும் அங்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டு இருக்கிறது. இந்தியாவில் படிக்க வைக்க வாய்ப்பு இருக்கின்றதா என பார்க்க வேண்டும்.
தமிழகத்தில் மாணவர்களை சேர்ப்பது கடினம் என சொல்லி இருக்கின்றனர். இந்தியாவில் இடம் இல்லை எனில் வேறு நாட்டில் படிக்க வைக்க முடியுமா என்பதை மத்திய அரசு ஆராய வேண்டும். நாடு திரும்பியுள்ள மருத்துவ மாணவர்களின் கடனை ரத்து செய்யவேண்டும் அல்லது ஒத்தி வைக்க வேண்டும் என தெரிவித்தார்.
மேலும், கோவை மாணவர் உக்ரைன் இராணுவத்தில் சேர்ந்து இருப்பது அபாயமானது. ரஷ்யாவின் வாதம் கேட்கப்படவில்லை. ரஷ்யா போர் தொடுக்க சில காரணம் இருந்தது.
நேட்டோ ஏவுகணைகள் ரஷ்யாவிற்கு வருவதை அந்நாடு விரும்பவில்லை.
உக்ரைன் தரப்பு செய்திகள் மட்டுமே வெளிவருகின்றது. ரஷ்யா தரப்பு செய்திகள் வெளியிடப்படவில்லை.
கோவை மாணவர் சேர்ந்து இருப்பதைப் போல, ஒரு இஸ்லாமிய மாணவர் வேறு நாட்டு ராணுவத்தில் சேர்ந்து இருந்தால் ஜிகாதி என்று சொல்லி இருப்பார்கள், உக்ரைன் வெள்ளைக்கார நாடு. அவர்களுக்கு ஒரு பார்வை இவர்களுக்கு ஒரு பார்வை என பார்க்க கூடாது. மாணவர் உக்ரைனுடன் சேர்ந்து ரஷியவிற்கு எதிராக போரிடுவது ஏற்றுக்கொள்ள முடியாது.
சசிகலா இல்லாத அதிமுக தேர்தல்களில் தோல்வியை சந்தித்து வருகின்றனர். அதிமுகவின் வாக்கு வங்கி அப்படியே இருக்கின்றது.
தலைமை ஒருங்கிணைப்பில் இல்லாததால் அங்கு பிரச்சனை இருக்கின்றது. இரட்டை தலைமை செழிப்பாக இருக்காது.
மீட்புப் பணியில் வட இந்திய மாணவர்களுக்கு முன்னுரிமை கொடுப்பதாக வந்த விவகாரம் குறித்து வெளியுறவுத் துறை அமைச்சர் விளக்கம் அளிக்க வேண்டும். பாராளுமன்றத்தில் இது குறித்துக் கேட்போம். கடிதம் மூலமும் கேட்போம்.
இந்த அரசுக்கு பொருளாதாரத்தை நடத்த திறமை கிடையாது. லாபம் வரும் பொதுத்துறை நிறுவனங்களை விற்பது தவறானது. இரு குழுமங்களுக்கு மட்டுமே இந்திய நிறுவனங்கள் விற்கப்படுகிறது.
மேலும், காங்கிரஸ் ஒரு சில இடங்களில் தேர்தலில் வெற்றி பெறாமல் போயிருக்கலாம். அதற்காக காங்கிரஸ் கட்சியில் தலைமை இல்லை, துணிச்சல் இல்லை என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்தார்.