கிராமம் தத்தெடுப்பு விழா 2022 ஆர்.வி.எஸ் கல்வி அறக்கட்டளை மற்றும் மகளிர் சுய உதவிக்குழு, கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டம் இணைந்து இருகூர் பேரூராட்சிக்குட்பட்ட இராவத்தூர் கிராமத்தைத் தத்தெடுக்கும் விழா மற்றும் கிராமப்புற பெண்களுக்கு நூலகம் அமைத்தல் விழா இன்று நடைபெற்றது.
கோவை: இருகூர் பேரூராட்சிக்குட்பட்ட இராவத்தூர் கிராமத்தைத் தத்தெடுக்கும் விழா மற்றும் கிராமப்புற பெண்களுக்கு நூலகம் அமைத்தல் விழா இன்று நடைபெற்றது.
இவ்விழாவில் கல்லூரி மேலாண்மை அறங்காவலர் செந்தில் கணேஷ் மற்றும் தாளாளர் வித்யா லட்சுமி செந்தில் கணேஷ் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புச் செய்தனர். விழாவில் கல்லூரி முதல்வர் முனைவர் த.சிவகுமார் கலந்துகொண்டு அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
கல்லூரிச் செயலர் பேராசிரியர் சாரம்மா சாமுவேல் கலந்து கொண்டு சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்து பேசினார். இருகூர் பேரூராட்சி தலைவர் ஆ. சந்திரன் கலந்து கொண்டு கிராம முன்னேற்றம் குறித்தும் கிராம பெண்கள் கல்வி மற்றும் சுயதொழில்களில் தன்னிறைவு பெற வேண்டும் என்றும், இராவத்தூர் கிராமத்தை ஆர்.வி.எஸ் கல்வி அறக்கட்டளை தத்தெடுத்தது கிராமத்திற்குக் கிடைத்த பெருமையென்றும் பேசினார்.
சிறப்பு விருந்தினராக இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த எலீணா இசட் மோசஸ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அவர் பேசுகையில் இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் பிரதமராக வர வேண்டும் என்றும், பல சாதனைகளைப் பெண்கள் படைத்தல் வேண்டும் என்றும் பேசினார். மேலும் தான் பல மைல்களைத் தாண்டி வந்தாலும் பெண்கள் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் தன்னிகரற்று விளங்க வேண்டும் என்றும், தன்னுடைய இரண்டு சகோதரர்களுக்கும் உதவி செய்ததாகவும், பெற்றோர்களின் உறுதுணை இருந்தால் மட்டுமே பெண்கள் முன்னேற முடியும் என்றும் பேசினார்.
மாணவர் நல மன்ற தலைவர் முனைவர் விவேகானந்தர் கலந்து கொண்டு பெண்கள் நூலகத்தைப் பயன்படுத்த வேண்டும் என்றும், மகளிர் சுயதொழில் கற்று ஊருக்கும், சமுதாயத்திற்கும் தங்கள் பங்களிப்பை அளித்திட வேண்டும் என்றும் பேசினார்.
இவ்விழாவில் துணை முதல்வர் முனைவர் ஐயப்ப தாஸ் நன்றியுரை வழங்கினார். துறை இயக்குனர்கள், துறைப் பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டு சிறப்பு செய்தனர். நாட்டுப்பண்ணுடன் விழா இனிதே நிறைவுற்றது.