ஒரு வழியாக தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தலும் நடந்து முடிந்த நிலையில், மேயர், துணை மேயர், கவுன்சிலர்கள் அவர்களின் அதிகாரம், பொறுப்புகள் என்ன? என்பது குறித்து மக்களுக்கு பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன.
கோவை: ஒரு வழியாக தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தலும் நடந்து முடிந்த நிலையில், மேயர், துணை மேயர், கவுன்சிலர்கள் அவர்களின் அதிகாரம், பொறுப்புகள் என்ன? என்பது குறித்து மக்களுக்கு பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன.
தேர்தலுக்கு முன்புவரை, மாநகராட்சி ஆணையாளர் தான் முழு அதிகார, பொறுப்பில் இருந்து மாநகராட்சி நிர்வாகத்தை கவனித்துக். கொள்வார்கள். அதே போல நகராட்சி, பேரூராட்சிகளில் செயல் அலுவலர்கள், தனி அலுவலர்களாக பணியாற்றி வந்தனர். ஆனால், தேர்தல் முடிந்த பிறகு, தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளே முழு அதிகாரத்துடன் செயல்பட உள்ளனர்.
இந்த மக்கள் பிரதிநிதிகளின் அதிகாரம், பொறுப்புகள், பணிகள் என்ன? என்பதை பார்க்கலாம்.
மாநகராட்சி மேயர்
மாநகராட்சியின் மேயர் என்பவர் அந்த மாநகராட்சியின் முதல் குடிமகன் ஆவார். அவரே நகரின் ஒட்டுமொத்த குரலாய் இருப்பவர். குறிப்பாக, தமிழகத்தில் முதலமைச்சர் போல, மாநகராட்சிக்கு மேயர் முழு அதிகாரம் கொண்டவர். வணக்கத்திற்குறிய மேயர் என்ற அழைக்கப்பட்டு வந்த நிலையில், இப்போது மாண்புமிகு மேயர் என்று அழைக்கும் வழக்கம் கொண்டு வரப்பட்டது. அதற்கான அரசானையும் வெளியிடப்பட்டுள்ளது.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சிலர்களின் கூட்டத்தை நடத்தும் பொறுப்பு மேயருக்கு உண்டு. கவுன்சிலர்கள் கூட்டத்தில் தீர்மானங்களை மேயர் முன் வைப்பார்.
பிறர் கொண்டு வரும் தீர்மானங்களை ஏற்பதும், தவிர்ப்பதும் மாநகராட்சி மேயரின் விருப்பம். மேயருக்கு ரூ.1 கோடி ரூபாய் வரையிலான திட்டங்களுக்கு அனுமதி வழங்கும் அதிகாரம் உண்டு.
ஆனால், அந்த அதிகாரத்தை கவுன்சிலர்கள் கூட்டத்தின் ஒப்புதலில் பெற வேண்டும். அவசரம் என்றால், கவுன்சிலர்கள் ஒப்புதல் பெறாமல் முன் ஒப்புதல் கொடுத்து திட்டங்களை செயல்படுத்த முடியும். மேயருக்கு தனியாக ஊதியம் என்று எதுவும் இல்லை.

மேயருக்கு மாநகராட்சி சார்பில் அவர் பதவிக்காலம் வரை வசிக்க பங்களா வசதி, கார் வழங்கப்படும்.

ஆட்சியர், கோட்டாட்சியர் போல மேயருக்கும் டவாலி ஒருவர் உடன் இருப்பார். மேயருக்கு மாநகராட்சி அலுவலகத்தில் தனி அறை ஒதுக்கப்படும். மாநகராட்சி திட்டங்களுக்கு மேயரின் ஒப்புதல் மிக முக்கியம், அதே நேரத்தில் ஆணையரின் அதிகாரங்களும், மேயருக்கு இணையாக இருக்கும்.
மாநகராட்சி துணை மேயர்

துணை மேயர் ஒரு கவுரவ பதவியாகவே மட்டுமே உள்ளது. அவரது ஒப்புதல், சக கவுன்சிலர்களின் ஒப்புதலாகவே பார்க்கப்படும். ஆனாலும், அவருக்கும் மாநகராட்சி அலுவலகத்தில் தனி அறை ஒதுக்கப்படும். கார், தனி வீடு வசதிகள் வழங்கப்படுகிறது.
மாமன்ற கூட்டத்தில் மேயரின் அருகில் அமர்ந்து சபையில் பங்கேற்கலாம். மேயர் வெளியூர் சென்றால், அல்லது செயல்பட முடியாத காலத்தில் அவரது பொறுப்புகளை துணை மேயர் கவனிக்கலாம்.
மாமன்ற உறுப்பினர்கள்
வார்டு கவுன்சிலர்களுக்கும் ஊதியம் கிடையாது. மாமன்ற கூட்டத்திற்கு வந்து செல்லும் படிகள் கொடுக்கப்படுகிறது. தங்கள் வார்டுகளின் தேவை, பிரச்சனைகள் குறித்து மாமன்றத்தில் தீர்மானமாக வைப்பார்கள். பணிகள் மேற்கொள்ளப்படுகிறதா? மக்களின் தேவை பிரச்சனைகளை நேரில் சென்று கண்டறியும் பணிகளை மேற்கொள்வார்கள். கவுன்சிலர் வார்டு மக்களின் பிரதிநிதியாக மாமன்றத்தில் ஒலிப்பார்.
இது வரை தனி அலுவலர், துறை சார் அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் கண்கணிப்பில் இருந்த உள்ளாட்சி நிர்வாகம், நேரடியாக மக்கள் பிரதிநிதிகளிடம் சென்றுள்ளது. குடிநீர், சாக்கடை, தெரு விளக்கு, குப்பை தொட்டி, சுகாதாரம் என குறிப்பிட்ட அதிகாரிகளை மக்கள் நாடவேண்டியது இல்லை. வார்டு கவுன்சிலரே அதை அதிகாரிகளிடம் கொண்டு சென்று தீர்வு காண்பார் என்பது குறிப்பிடத்தக்கது.