கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத்திற்குட்பட்ட கருப்பராயன்பாளையம் மாநகராட்சி தொடக்கப்பள்ளி வளாகத்தில் தமிழ்நாடு நகர்ப்புற வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நட்டுவைக்கும் பணியை மேயர் கல்பனா ஆனந்தகுமார் தொடங்கி வைத்தார்.
கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண்.6 க்குட்பட்ட கருப்பராபயன்பாளையம் மாநகராட்சி தொடக்கப்பள்ளி வளாகத்தில் தமிழ்நாடு நகர்ப்புற வேலை வாய்ப்பு திட்டத்தின்கீழ் மரக்கன்றுகள் நட்டுவைக்கும் பணியை மேயர் கல்பனா ஆனந்தகுமார் தொடங்கி வைத்தார்.
நகர்ப்புற ஏழைகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில் ரூ.100 கோடி மதிப்பீட்டில் “நகர்ப்புற வேலை வாய்ப்புத் திட்டம்” என்ற திட்டம் பெருநகர சென்னை மாநகராட்சியில் இரண்டு மண்டலங்களில், ஏனைய மாநகராட்சிகளில் தலா ஒரு மண்டலமும், 7 நகராட்சி நிர்வாக மண்டலங்களில் தலா ஒரு நகராட்சி என 7 நகராட்சிகள், 37 மாவட்டங்களில் தலா ஒரு பேரூராட்சி வீதம் 37 பேரூராட்சிகளிலும் இத்திட்டம் இவ்வாண்டு செயல்படுத்தப்பட உள்ளது.
இதில் கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலத்தில் இதுவரை 1220 பயனாளிகளுக்கு தமிழ்நாடு நகர்ப்புற வேலை வாய்ப்பு திட்டத்திற்கான அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. மேலும் 3753 நபர்கள் தமிழ்நாடு நகர்ப்புற வேலை வாய்ப்பு திட்டத்திற்கான அடையாள அட்டை வேண்டி விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கு வேலை செய்யும் அளவைப் பொருத்து அரசினால் நிர்ணயிக்கப்பட்ட ஊதியம் வழங்கப்படும். அதிகபட்சமாக நாள் ஒன்றுக்கு ரூ.382/- ஊதியம் வழங்கப்படும். வாரம் ஒருமுறை ஊதியம் வழங்கப்படும். வேலைக்கான ஊதியம் மின்னணு நிதி மேலாண்மை முறை (e-FMS) மூலம் தொழிலாளர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.
இந்நிகழ்ச்சியில் துணை மேயர் ரா.வெற்றிசெல்வன், மாநகரப் பொறியாளர் (பொ) ராமசாமி, மாமன்ற உறுப்பினர்கள் எஸ்.பொன்னுசாமி, கே.விஜயகுமார், கோவை பாபு (௭) மு.செல்வகுமார், முன்னாள் பேரூராட்சித்தலைவர் பையா கிருஷ்ணன், உதவி செயற்பொறியாளர் சுந்தர்ராஜன், உதவி பொறியாளர் குமார், மண்டல சுகாதார ஆய்வாளர் முருகா ஆகியோர் கலந்து கொண்டார்கள்.