சோழர் ஆட்சிக் காலத்தில் தமிழரால் கட்டப்பட்ட இந்த கோவில் இது வரை அரசு வசம் வராமல், தீட்சிதர்கள் வசமே உள்ளதால் அரசுடைமையாக்கக் கோரி ஆர்ப்பாட்டம்.
கோவை: தில்லை நடராஜர் கோவிலை அரசுடைமையாக்கக் கோரி கோவையில் மக்கள் அதிகாரம் அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் தில்லை நடராஜர் கோவில் தற்போதும் தீட்சிதர்கள் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் தில்லை நடராஜர் கோவிலுக்கு நுழைந்த தமிழ் பெண் ஒருவரை அங்கிருந்த தீட்சிதர்கள் வெளியே இழுத்துச் செல்லும் காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாகி, கடும் கண்டனங்கள் எழுந்தது.
இந்நிலையில், தில்லை நடராஜர் கோவிலை அரசுடமையாக்க கோரி மக்கள் அதிகாரம் அமைப்பினர் கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது பேசிய அவ்வமைப்பினர் கூறுகையில்,
சோழர் ஆட்சிக் காலத்தில் குறிப்பாக தமிழரால் கட்டப்பட்டது இந்த கோவில், ஆனால், இது வரை அரசு வசம் வராமல், தீட்சிதர்கள் வசமே உள்ளது. அதே போல் அங்கு சென்ற தமிழ் பெண்ணை வெளியே இழுத்துச் சென்றது தொடர்பாக தீட்சிதர்கள் மீது எந்த வழக்குகள் பதிவு செய்யவில்லை என தெரிவித்தனர்.
மேலும், தமிழக அரசு சிறப்புச் சட்டம் இயற்றி, சிதம்பரம் தில்லை நடராஜர் கோவிலை அரசுடைமையாக்க வேண்டும் என கோரி கோசங்களை எழுப்பினர்.
அதே போல், ஜிஹாப் விவகாரத்தில் ஜிஹாப் அணிவது அவர்களது விருப்பம் அன்மையில் கர்நாடகாவில் தொடங்கிய பிரச்சனை ஓயவில்லை இதில் மத்திய அரசு தலையிட்டு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தனர்.