இரு தரப்பினரும் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணாவில் ஈடுபட்டு வருவதால், அன்னூர் பேரூராட்சி அலுவலக வளாகத்தில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.
கோவை: கோவை அன்னூர் பேரூராட்சி தலைவர் பதவிக்கான தேர்தலில் திமுகவினரிடையே மோதல் ஏற்பட்டதால் பேரூராட்சி அலுவலகத்தில் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.
கோவை அன்னூர் பேரூராட்சியில் மொத்தமுள்ள 15 வார்டுகளில் திமுக - 7, சிபிஎம் - 2, காங்கிரஸ் - 1, பிஜெபி - 1, சுயேச்சை - 4, இடங்களில் வெற்றிபெற்றுள்ளது.
திமுகவில் நகரச்செயலாளர் பரமேஸ்வரன் மற்றும் சமீபத்தில் திமுகவில் சேர்ந்த விஜயகுமார் ஆகியோர் தலைவர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
அன்னூர் பேரூராட்சி தலைவருக்கான மறைமுக தேர்தலில் வேட்பாளராக திமுக சார்பில் வெற்றி பெற்ற விஜயகுமார் அறிவிக்கப்பட்ட நிலையில், அதே கட்சியைச் சேர்ந்த பரமேஸ்வரன் என்பவரும் வேட்புமனு தாக்கல் செய்தார்.
விஜயகுமாருக்கு சுயேச்சைகள் ஆதரவு உள்ளதாக கூறப்படும் நிலையில், பரமேஸ்வரனும் மனு தாக்கல் செய்ததால் பேரூராட்சி அலுவலகத்தில் இருதரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனையடுத்து, வாக்குவாதம் கைகலப்பாக மாறியதால் வாக்குச்சீட்டுகள் கிழிக்கப்பட்டு அலுவலகத்தில் ஜன்னல் கண்ணாடி உடைக்கப்பட்டது.
இதையடுத்து, இரு தரப்பினரும் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணாவில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அன்னூர் பேரூராட்சி அலுவலக வளாகத்தில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.