பெண்ணின் குடும்பத்தார் அவர்களை சேர்த்து வைப்பதாக கூறி தேனி மாவட்டத்திற்கு காரில் அழைத்துச் சென்றதாகவும், அப்போது, தங்களை காரில் கடத்தியதாக அவர்கள் கூச்சலிட்டனர். உயிருக்கு பாதுகாப்பு இல்லை என்று இருவரும் ரோட்டில் காப்பாற்றுங்கள் என்று கதறி அழுதனர்.
கோவை: கோவை லட்சுமி மில் சிக்னல் அருகே இரவு 9.30 மணியளவில் காரில் புதிதாக திருமணமான காதல் ஜோடியினர் தங்களை காரில் கடத்தி செல்வதாக சத்தம் போட்டனர். சத்தம் கேட்டதும், சிக்னலில் நின்று கொண்டிருந்த வாகன ஓட்டிகள் உடனடியாக விரைந்து சென்று விசாரித்தனர்.
அப்போது அந்த வாலிபர் மற்றும் இளம் பெண் ஆகியோர் தங்களை காரில் கடத்தி செல்வதாக குற்றம் சாட்டினர். இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் பந்தைய சாலை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். விசாரணையில் அவர்கள் கோவை மணியகாரம்பாளையம் பகுதியை சேர்ந்த
விக்னேஷ்வர் (22), சரவணம்பட்டி பகுதியை சேர்ந்த சினேகா (19) என்பதும், இவர்கள் சமீபத்தில் காதலித்து காந்திபுரம் பகுதியில் திருமணம் செய்து கொண்டது தெரியவந்தது.
இந்த நிலையில், சினேகாவின் தந்தை அவர்களை சேர்த்து வைப்பதாக கூறி தேனி மாவட்டத்திற்கு காரில் அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. அப்போது, தங்களை காரில் கடத்தியதாக அவர்கள் கூச்சலிட்டனர்.
மேலும், காரில் இருந்தவர்கள் கையில் கத்தி வைத்திருந்ததாகவும் அவர்கள் உயிருக்கு பாதுகாப்பு இல்லை என்று இருவரும் ரோட்டில் காப்பாற்றுங்கள் என்று கதறி அழுதனர்.
தற்போது, அவர்கள் இருவர் மற்றும் குடும்பத்தாரிடம் சரவணம்பட்டி காவல் நிலையத்தில் விசாரணை நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கோவையில் உள்ள பிரதான சிக்னலில் பொதுமக்கள் முன்னிலையில் அரங்கேறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.