60 மாமன்ற உறுப்பினர்களுக்கும் மாநகராட்சி ஆணையர் கிரந்தி குமார் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சியில் தேர்வான 60 மாமன்ற உறுப்பினர்களும் இன்று மாநகராட்சி அலுவலகத்தில் பதவி ஏற்றுக்கொண்டனர்.
திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில், 60 வார்டுகளில் தேர்வான உறுப்பினர்கள் இன்று பதவி ஏற்றுக்கொண்டனர்.
இவர்களுக்கு மாநகராட்சி ஆணையர் கிரந்தி குமார் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
ஒவ்வொரு உறுப்பினர்களாக வந்து உறுதிமொழி எடுத்து பதவி ஏற்றுக்கொண்டனர். திருப்பூர் மாநகராட்சியில் திமுக 24 இடங்களிலும், அதன் கூட்டணிக் கட்சியாக இருக்கும் சி.பி.ஐ - 6, சி.பி.எம் - 1, மதிமுக - 3, காங்கிரஸ் - 2, IUML - 1 , மனித நேய மக்கள் கட்சி - 1 இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர்.
அதே போல், அதிமுக - 17, தமிழ் மாநில காங்கிரஸ் - 1, பா.ஜ.க - 2, சுயேட்சைகள் - 2 பேர் என மொத்தம் 60 நபர்கள் இன்று பதவி ஏற்றுக்கொண்டனர்.
இதில் கம்யூனிஸ்ட் கட்சி கவுன்சிலர்கள் பதவி ஏற்கும் போது உறுதிமொழி ஏற்றுக்கொண்ட பின் இன்குலாப் ஜிந்தாபாத் என்றும், பா.ஜ.க உறுப்பினர்கள் பாரத் மாதா கி ஜெய், வந்தே மாதிரம் என்றும் கூறினர்.
அதே போல், ஒரு சில திமுக உறுப்பினர்கள் அவர்களின் தலைவர் மீது ஆணையிட்டும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.