காலில் ஏற்பட்டுள்ள ஆழமான காயத்திற்கு ஆங்கில மருந்துகள், மூலிகை மற்றும் ஆயுர்வேத தைலங்களைக் கொண்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
கோவை: கோவை பொள்ளாச்சி டாப்சிலிப்பில் அடிபட்ட பெண் குட்டி யானைக்கு வரகளியாறு யானைகள் முகாமில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு, டாப்ஸ்லிப் ஆனைமலை புலிகள் காப்பகம் கிளாஸ் ஹவுஸ் பகுதியில் காலில் அடிபட்டுத் தவித்து வந்த பெண் குட்டி யானைக்கு தற்போது வரகளியாரு யானைகள் முகாமில் வைத்து வனத்துறையினர் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
தாயிடம் இருந்து வழிதவறி பிரிந்த குட்டி யானையை, ஆண் யானை தாக்கியிருக்கூடும் என்று தெரிவித்த வனத்துறையினர், அந்த யானையின் காலில் ஏற்பட்டுள்ள ஆழமான காயத்திற்கு ஆங்கில மருந்துகள், மூலிகை மற்றும் ஆயுர்வேத தைலங்களைக் கொண்டு புண்ணை குணப்படுத்த சிகிச்சை அளித்து வருகின்றனர்.
மீட்கப்பட்டு மூன்று நாட்கள் ஆன நிலையில், தற்போது அந்த பெண் குட்டி யானை சிகிச்சை நன்கு ஒத்துழைப்பு கொடுப்பதாகவும், உணவு உட்கொண்டு வருவதாகவும் வன மருத்துவர் சுகுமார் தெரிவித்துள்ளார்.
மேலும், இன்றைய தினம் நாமக்கல் மாவட்ட வன உயிர் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் இருந்து மூத்த மருத்துவர் தர்மசீலன் தலைமையில் மருத்துவ குழுவினர் யானையை பரிசோதிக்க உள்ளனர் என்றும், காயம் ஏற்பட்ட பகுதியில் இருந்து மாதிரிகள் எடுக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்படும் என்று மருத்துவர் சுகுமார் தெரிவித்துள்ளார்.
மேலும், ஆய்வு அறிக்கை முடிவுகளின் படி, குட்டி யானைக்கு மேல் சிகிச்சை ஏதேனும் தேவைப்படுமா என்பது குறித்து மருத்துவர் தர்மசீலன் தலைமையிலான மருத்துவ குழுவினர் ஆலோசனை வழங்குவர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.