போலீசார் உதவியுடன் பயணிகளின் பைகளில் சோதனை மேற்கொண்டதால் பரபரப்பு.
திருப்பூர்: திருப்பூரில் அரசு பேருந்தில் நடத்துநரின் பணம் திருடு போனதையடுத்து, பேருந்தை நிறுத்தி பயணிகளிடம் சோதனையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பூர் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து நம்பியூருக்கு அரசு நகரபேருந்து ஒன்று புறப்பட்டது. இந்த பேருந்து 80க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது.
இந்நிலையில், பேருந்தானது புஷ்பா சந்திப்பை கடந்தபோது நடத்துநரான ரங்கசாமி தனது பேண்ட் பாக்கெட்டில் இருந்த மணிபர்ஸ் திடீரென காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதையடுத்து, அவர் பேருந்து ஓட்டுனரிடம் தகவலைக் கூறி பேருந்தானது சாலையோரம் நிறுத்தப்பட்டு, பேருந்திலிருந்த பெரும்பாலான வடமாநில இளைஞர்களிடம் நடத்துநர் மற்றும் ஓட்டுனர் மணிபர்ஸ் குறித்து சோதனை நடத்தினர்.
பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உதவியுடன் வடமாநில இளைஞர்களிடம் இருந்த பைகளில் சோதனை மேற்கொண்டும் கடைசிவரை மணிபர்ஸ் கிடைக்கவில்லை.
பின்னர், நடத்துநர் ரங்கசாமியோ பயணிகளிடம் பர்சில் அடையாள அட்டை, நடத்துநர் உரிமம் அட்டை, ஏ.டி.எம்.கார்டுகள் மற்றும் ரூ.300 பணம் இருக்கிறது, பணத்தை எடுத்துவிட்டு மணிபர்சை பேருந்தில் போட்டுவிடுங்கள் என கூறிவிட்டு மீண்டும் பேருந்தில் பயணிகள் ஏற்றப்பட்டு, அரசு பேருந்து கிளம்பி சென்றது. இந்த சம்பவத்தால் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.