கோவை மாமன்றத்தில் எதிர்க் கட்சியின் பலம் குறைவாக இருந்தாலும், ஆளும் கட்சியானது எதிர்க் கட்சிகள் கோரிக்கைகளை முன்வைக்க அனுமதிக்க வேண்டும் என்று கருத்து.
கோவை: கோவை மாநகராட்சியில் அமையவுள்ள மாமன்றம் எவ்வாறு இருக்கும் என்பது குறித்து பல்வேறு உறுப்பினர்களின் கருத்துக்கள் தரப்பட்டுள்ளது.
இதுகுறித்து பத்மநாபன் (CITU மாவட்ட தலைவர்) கூறியதாவது:-
கோவை மாமன்றத்தில் எதிர்க் கட்சியின் பலம் குறைவாக இருந்தாலும், ஆளும் கட்சியானது எதிர்க் கட்சிகள் கோரிக்கைகளை முன்வைக்க அனுமதிக்க வேண்டும். மாமன்றத்தில் நடக்கும் ஆரோக்கியமான கலந்துரையாடல் ஜனநாயகத்தைப் பாதுகாக்க முடியும்.
கடந்த 10 ஆண்டுகளில் ஊழலால் மாநகராட்சியின் அனைத்தும் சூறையாடப்பட்டுள்ளது. கோவை மாநகராட்சியில் வசூலாகும் பணம் என்பது ஊழியர்களுக்கு சம்பளம் போடுவதற்கே சரியாக உள்ளது என பெரிதும் கவலைகொள்கின்றனர். கடந்த 10 ஆண்டு காலத்தில் பொருளாதாரத்தில் பெரும் சீர்கேடுகள் மற்றும் நிதி நிலைமை என்பது சரிந்துவிட்டது.
மேலும், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் குளங்கள், ரேஸ் கோர்ஸ் போன்ற மேம்பட்டுள்ள பகுதிகளின் மேம்பாட்டிற்காக நிதியை பயன்படுத்தாமல் சரிவர பயன்படுத்த வேண்டும் என தெரிவித்தார். மேலும், மாமன்றத்தில் (சீரோ கார்ஸ் Zero hours) பூஜ்ஜிய நேரத்தில் மாமன்ற உறுப்பினர்கள் அவர்களது தேவைகள், கோரிக்கைகள், கருத்துகளை முன்வைக்க வாய்ப்பாக இருக்கும் எனவும் தெரிவித்தார். மேலும், ஆளும் கட்சியான திமுக அனைத்து மாமன்ற உறுப்பினர்களுக்கும் அவர்கள் தேவையை தெரிவிக்க நிச்சியம் வாய்ப்பு கொடுக்கும் என தெரிவித்தார்.
இதுகுறித்து கோவை மாநகர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் கார்த்திக் DMK கூறியதாவது:-
கோவை மாநகராட்சியில் கடந்த பத்தாண்டுகளாக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாத நிலையில், தற்போது நடந்து முடிந்துள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக மாமன்றத்தில் 96 சதவீத இடத்தை பிடித்துள்ளது. இதில் திமுக நிச்சயம் கோவை மாநகராட்சி வளர்ச்சிப் பணிக்காக அனைத்தையும் செய்யும் என்று திமுகவின் கோவை மாநகர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் கார்த்திக் தெரிவித்துள்ளார்.
மக்களின் அத்தியாவசிய தேவையான குடிநீர் மற்றும் சாலைக்கான திட்டங்கள் அனைத்தும் திமுக காலகட்டத்தில் கொண்டுவந்தது. ஆனால் கடந்த 10 ஆண்டுகளில் திமுக கொண்டுவந்த திட்டங்கள் அனைத்தையும் அதிமுக கிடப்பில் போட்டுவிட்டது. தற்போதைய சூழ்நிலையில் கோவை மாநகராட்சியில் மக்கள் பெருமளவில் குடிநீருக்காக சிரமப்பட்டு வருகின்றனர். மேலும் ஒன்பது நாட்கள் அல்லது பத்து நாட்களுக்கு ஒரு முறையே குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
கோவை மாநகராட்சியில் உள்ள மக்களுக்கு வாரம் ஏழு நாட்களும் குடிநீர் கிடைப்பதற்கு வசதியாக 595 கோடி ரூபாய் செலவில் அமையப் பெற வேண்டும் என்று மாமன்றத்திலிருந்து அறிக்கை தலைமைக்கு அனுப்பப்பட்ட திட்டத்தை அதிமுக கிடப்பில் போட்டது. அதனைத் தொடர்ந்து 2018ல் அதிமுக 1150 கோடி ரூபாயில் தனியார் நிறுவனமான சூயஸ் நிறுவனத்திற்கு குடிநீர் வழங்கும் திட்டத்தை வழங்கியது. கோவையில் 3 திட்ட சாலைகள் அமைப்பதற்கான திட்டம் மற்றும் மேம்பாலம் அமைப்பதற்கான திட்டம் அனைத்துமே திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்டது. ஆனால் அதிமுக இதை அனைத்தையும் கிடப்பில் போட்டு விட்டது.
மேலும், தற்போது ரயில் உயர்மட்டப் பாலம் எஸ்.எஸ்.ஹெச். காலனியில் அமைப்பதற்கு 29 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தொழில் வளர்ச்சி அடைய வேண்டுமென்றால் அத்தியாவசிய தேவைகளான சாலைகள் சீரமைத்தல், மின் இணைப்புகள் குடிநீர் போன்ற தேவைகள் அனைத்தும் மாநகராட்சியில் இருப்பது முக்கியமானது. ஆகவே நடக்கவிருக்கும் இந்த மாமன்றத்தில் நிச்சயம் அனைத்து பிரதிநிதிகளும் இதனைக் குறித்து ஆலோசனை நடத்தி அவரவர் பகுதிகளுக்கு தேவைப்படும் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்வார்கள் என தெரிவித்தார்.
2019ல் கொண்டுவரப்பட்ட பாதாள சாக்கடை திட்டத்தை அதிமுக கிடப்பில் போட்டது. அதன் பிரதிபலனாக மாநகராட்சி பகுதியில் உள்ள மழைநீர் வடிகால் அனைத்தும் சாக்கடைகளாக இன்று மாறியுள்ளது. ஆகவே, கூடிய விரைவில் பாதாளசாக்கடை இணைக்கும் திட்டத்தைக் கொண்டுவர மாமன்றத்தில் உள்ள பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் எனவும் தெரிவித்தார். அமைந்துள்ள இம்மாமன்றத்தில் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளும் கிடைத்திட மாமன்ற உறுப்பினர்கள் முன்வந்து இதனை செய்வார்கள் என தெரிவித்தார்.
இதுகுறித்து லீலாவதி (முன்னாள் துணை மேயர் அதிமுக) கூறியதாவது:-
மேயர் யாராக இருப்பினும் மக்களின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்வதே மாமன்ற உறுப்பினர்களின் கடமையாக உள்ளதால் ஆட்சியில் யார் இருப்பினும் அதிமுகவில் வெற்றி பெற்ற மாமன்ற உறுப்பினர்கள் மக்களுக்குத் தேவையான அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்வார்கள் என்று லீலாவதி முன்னாள் துணை மேயர் அதிமுக தெரிவித்துள்ளார்.
மேயர் என்பவர் அனைவருக்கும் பொது என்பதால் எங்கள் மாமன்ற உறுப்பினர்கள் நிச்சயம் அவரவர் பகுதியில் உள்ள பிரச்சனைகளை மாமன்றத்தில் கூறி அவர்களுக்கு தேவையான கோரிக்கைகளை முன் வைப்பார்கள். அதிமுக ஆட்சிக் காலத்தில் துணை மேயராக இருந்த நான் வார்டுகளில் எந்தவித பிரச்சினைகள் இருந்தாலும், மாமன்ற உறுப்பினர்களில் மற்ற கட்சியினர் இருந்தாலும் அவர்கள் கூறும் கோரிக்கைகளை ஏற்று பாகுபாடு இல்லாமல் அனைத்து பிரச்சினைகளையும் செய்து முடித்துள்ளோம். அதைப்போலவே தற்போது அமைந்துள்ள மாமன்றம் இருக்கும் என்று நம்புகிறேன். வார்டுகளில் பெரிதும் சாக்கடைகள் அடைப்பு, சாலைகள் சீரமைத்தல், மின்விளக்கு வேண்டுதல், குப்பைகளை சுத்தம் செய்தல் தெருநாய் தொந்தரவு, கழிவு நீர் கசிவு, போன்றவையே பிரச்சனைகளாக மக்களிடத்தில் இருந்து பெருமளவில் கோரிக்கைகளாக முன் வைக்கப்படும். ஆகவே, மக்கள் பிரதிநிதியாக உள்ள மாமன்ற உறுப்பினர்கள் அதனை சரி செய்து கொடுப்பதே பணியாக கொள்ள வேணடும் என தெரிவித்தார்.
இதுகுறித்து முன்னாள் மேயர் ராஜ்குமார் கூறியதாவது:-
தற்போது அமையப்பெற்றுள்ள மாமன்றத்தின் மூலம் முதலமைச்சரின் அனைத்து திட்டங்களும் எளிதாக மக்களுக்கு கொண்டு சேர்க்க முடியும். முன்னாள் மேயர் ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.
கோவை மாமன்றம் என்பது தமிழ்நாடு சட்டசபைக்கு சமமாக கலந்துரையாடல்கள் நடைபெறும் இடமாகவே இருந்து வந்துள்ளது என முன்னாள் மேயர் ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.
தற்போது கோவையில் அமைந்துள்ள மாமன்றத்தில் விவாதங்களுக்கு பெரிதும் வாய்ப்பு இருக்காது, ஏனென்றால் எதிர்க்கட்சியின் சதவீதம் என்பது மிக மிக குறைவாக இருப்பதால் விவாதத்திற்கு வாய்ப்பு குறைவு என தெரிவித்துள்ளார்.
தற்போது அமையப்பெற்றுள்ள மாமன்றத்தின் மூலம் முதலமைச்சரின் அனைத்து திட்டங்களும் எளிதாக மக்களுக்குக் கொண்டு சேர்க்க முடியும். மக்களின் பிரதான கோரிக்கையாக இருப்பது, குப்பைகளை சுத்தம் செய்வது, கால்வாய்கள் தூர்வாருவது மற்றும் குடிநீர் விநியோகமே. தற்போது கோடைக்காலம் என்பதால் குடிநீர் விநியோகம் என்பதை சரிசமமாக அனைத்துப் பகுதி மக்களுக்கும் பகிர்ந்து கொடுப்பது குடிநீர் பற்றாக்குறைக்குச் சரியான தீர்வாக இருக்க முடியும் என்பது எனது கருத்து என்று தெரிவித்தார். மேலும், பெருமளவில் சிறுவாணியில் தட்டுப்பாடு ஏற்படும் நிலையில் பில்லூரில் கிடைக்கும் தண்ணீரை வைத்து சமம் செய்து வந்துள்ளோம் எனவும் தெரிவித்தார்.