காரமடை அரங்கநாதர் திருக்கோவில் தேரோட்டத்தின் போது செல்போன் திருடியதாகச் சிறுவன் உட்பட 4-பேர் கைது செய்யப்பட்டு, 8-செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.
கோவை: காரமடை அரங்கநாதர் திருக்கோவில் தேரோட்டத்தின் போது செல்போன் திருடியதாகச் சிறுவன் உட்பட 4-பேர் கைது செய்யப்பட்டு, 8-செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
கொங்கு மண்டலத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற வைணவ திருத்தலங்களில் ஒன்றான காரமடை அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோவிலில் மாசி மகத்திருத்தேர் விழா கடந்த பிப்ரவரி மாதம் 11 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் கடந்த பிப்ரவரி 17 ஆம் தேதி வெகு விமரிசையாக நடைபெற்றது.
இத்திருவிழாவில் கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அரங்கனைத் தரிசித்து அருளாசி பெற்றுச்சென்றனர்.
தேரோட்டத்தின் போது கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி பக்தர்களின் விலை உயர்ந்த செல்போன்கள் திருடு போனது குறித்துத் தொடர்ந்து காரமடை காவல் நிலையத்தில் புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. இதனையடுத்து வழக்குப்பதிவு செய்த காரமடை காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
மேலும், திருடு போன செல்போன்களின் ஐஎம்இஐ எண்களை வைத்தும் தீவிர விசாரணையில் ஈடுபட்டதில் மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த ஜெகதீஸ்(வயது 19), கார்த்திக்(வயது 21), அருண்(வயது 19) மற்றும் ஒரு சிறுவன் உட்பட 4 பேரை பிடித்து போலீஸ் பாணியில் விசாரணை செய்ததில் அவர்கள் கூட்ட நெரிசலை பயன்படுத்தி செல்போன் திருடியதை ஒப்புக்கொண்டனர்.
இதனையடுத்து அவர்களை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 8 செல்போன்களையும் பறிமுதல் செய்தனர். பின்னர்,அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.
செல்போன் திருட்டில் ஈடுபட்டதாகச் சிறுவன் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.