வரும் 2ம் தேதி மாமன்ற உறுப்பினர்களுக்கான பதவி ஏற்பு விழாவும், 4ம் தேதி மேயர் மற்றும் துணை மேயர் பதவிக்கான மறைமுக தேர்தல் நடைபெறுகிறது.
திருப்பூர்: திருப்பூரில் ஆறு ஆண்டுகளுக்கு பிறகு மாமன்ற கூட்ட அரங்கம் மற்றும் மேயர் அலுவலகம் சீர் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
கடந்த 2011ம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று திருப்பூர் மாநகராட்சியின் 60 வார்டுகளுக்கான மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் மேயர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
கடந்த 2011 முதல் 2016 வரை மாமன்ற கூட்டம் மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள மாமன்ற கூட்ட அரங்கில் நடைபெற்று வந்த நிலையில், 2016க்குப் பிறகு உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாமல் மாமன்ற கூட்ட அரங்கு மற்றும் மேயர் அலுவலகம் செயல்படாமல் இருந்தது.
இந்நிலையில், திருப்பூர் மாநகராட்சிக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நிறைவடைந்து 60 மாமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில், வருகின்ற 2ம் தேதி அவர்களுக்கான பதவி ஏற்பு விழாவும், 4ம் தேதி மேயர் மற்றும் துணை மேயர் பதவிக்கான மறைமுக தேர்தல் நடைபெற இருக்கிறது.
அதன் பின்பு, மாதந்தோறும் மாமன்றக் கூட்டம் நடைபெற உள்ள சூழ்நிலையில், ஆறு ஆண்டுகளுக்கு பின்பு மாநகராட்சி அலுவலகத்தில் மாமன்ற கூட்ட அரங்கம் மற்றும் மேயர் அலுவலகம் சீர் செய்யும் பணி தற்போது துவங்கி நடைபெற்று வருகிறது.