திருப்பூரில் தொடர்ந்து 3 வாரமாக ஞாயிற்றுக்கிழமை இரவுகளில் கொலை நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
திருப்பூர்: திருப்பூர் காட்டன் மார்க்கெட் வளாகத்தில் கை, கால் கட்டிய நிலையில் வாலிபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாநகர பகுதியில் அமைந்துள்ள காட்டன் மார்க்கெட் வளாகமானது பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் அதிக அளவில் வந்து பூக்கள் மற்றும் காய்கறிகள் வாங்கி செல்லும் இடமாக திகழ்கிறது.
இந்நிலையில், காட்டன் மார்க்கெட்டுக்கு இன்று அதிகாலை வழக்கம் போல வியாபாரிகள் பூக்கள் மற்றும் காய்கறிகள் விற்பனை செய்வதற்காக வந்துள்ளனர். அப்பொழுது அந்த வளாகத்தில் கை, கால்கள் கட்டிய நிலையில் வாலிபர் ஒருவர் சடலமாக கிடந்துள்ளார்.
இதையடுத்து, அருகில் இருந்தவர்கள் திருப்பூர் தெற்கு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் சடலத்தை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.
மேலும், கொலை செய்யப்பட்டது யார் என்று தற்போது வரை தெரியவில்லை.
தற்பொழுது காவல்துறையினர் சம்பவ இடத்தில் மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்களுடன் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். திருப்பூர் மாநகரில் தொடர்ந்து 3 வாரமாக ஞாயிற்றுக்கிழமை இரவுகளில் கொலை நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.