வனப்பகுதியில் உள்ள மலைக்கிராமங்களில் பழங்குடி மக்கள் சிரமங்களைத் தவிர்க்க விரைவில் நடமாடும் ரேசன் கடைகள் அமைக்கப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகத் தமிழ்நாடு சட்டப்பேரவை பொது கணக்குகள் குழுவின் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
கோவை: கோவை வனப்பகுதியில் உள்ள மலைக்கிராமங்களில் பழங்குடி மக்கள் சிரமங்களைத் தவிர்க்க விரைவில் நடமாடும் ரேசன் கடைகள் அமைக்கப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகத் தமிழ்நாடு சட்டப்பேரவை பொது கணக்குகள் குழுவின் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவை பொது கணக்குகள் குழு, தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் இன்று கோவையில் ஆய்வு மேற்கொண்டது. குழுவின் உறுப்பினர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள், பிஆர்ஜி.அருண்குமார், எஸ்.காந்திராஜன், சரஸ்வதி, மா.சிந்தனைச்செல்வன், எஸ்.சுதர்சனம், பிரகாஷ், பூண்டி.கே.கலைவாணன், எம்.ராஜ முத்து, தி.வேல்முருகன், உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
கோவையில் தொண்டாமுத்தூர் செங்குபதி மலைவாழ் கிராம், சோமையம்பளையம் அண்ணா பல்கலைக்கழக வளாகம், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், ஆர்.எஸ்.புரம் பகுதியில் கட்டப்பட்டு வரும் பெண்கள் விடுதி, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ஆகிய இடங்களில் இன்று இக்குழு ஆய்வு மேற்கொண்டது.
பின்னர் கோவை ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் அதிகாரிகளுடனான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் பி.ஆர்.நடராஜன், சண்முக சுந்தரம், கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.ச.சமீரன், மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுங்கரா, கோவை மாவட்ட சட்டமன்ற உறுப்பினர்களான அம்மன் அர்ஜுனன், அமுல் கந்தசாமி, ஏ.கே.செல்வராஜ், கந்தசாமி, ஜெயராமன், காவல்துறை, வனத்துறை, தீயணைப்புத்துறை உள்ளிட்ட பல்வேறு அரசுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
ஆய்வுக்கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த செல்வப்பெருந்தகை, கோவை மலைக்கிராமம், வேளாண் பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம், அரசு மருத்துவமனை ஆகிய இடங்களில் ஆய்வு மேற்கொண்டதாகவும், பொதுமக்கள், அரசு ஊழியர்களிடம் குறைகளைக் கேட்டுத் தெரிந்து கொண்டதாகவும் கூறினார்.
கோவை வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களில் வாழும் பழங்குடியின மக்கள், வனவிலங்குகளால் தாக்கப்படுவதைத் தடுக்க உடனடி நடவடிக்கையாக நடமாடும் ரேசன் கடைகள் மூலம் ரேசன் பொருட்களை விநியோகிக்கப் பரிந்துரைக்கப் பட்டுள்ளதாகவும், பள்ளி செல்லும் குழந்தைகள் மற்றும் பொதுமக்களின் வசதிக்காக உடனடியாக பேருந்து வழித்தடம் இல்லாத கிராமங்களுக்குப் பேருந்து சேவை வழங்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
கோவை அரசு மருத்துவமனையில் உள்ள பல்வேறு பிரச்சினைகள் குறித்துக் கேட்டறிந்துள்ளதாகவும், அவற்றை ஒவ்வொன்றாகக் களையப் பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். அரசு மருத்துவமனையில் 6 ஆண்டுகளுக்கு முன்பு வாங்கப்பட்ட சாய்வு படுக்கைகள் சேதமாகியுள்ளதைக் கண்டதாகவும், அதனால் மக்களுக்குப் பயனில்லை என்பதால் உடனடியாக அதனைச் சரி செய்ய நடவடிக்கை எடுக்க கூறியுள்ளதாகவும் தெரிவித்தார்.
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில், 12 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வெளிநாடுகளிலிருந்து வாங்கப்பட்ட ஆய்வு உபகரணங்கள் 6 ஆண்டுகளுக்கும் மேலாகப் பயனின்றி இருப்பதாகவும், அதனைத் தற்காலிக செட்டில் வைத்து பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், விரைவில் இதற்கான கட்டிடங்கள் கட்டப்படும் எனவும் தெரிவித்தார்.
கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் உபகரணங்களை வாங்கவும், காலிப்பணியிடங்களை நிரப்பவும் பரிந்துரை செய்துள்ளதாகவும், வன விலங்குகள் ஊருக்குள் வருவதைத் தடுக்க சோலார் மின்வேலிகள் பயனளிக்காது என்பதால், ரோப் வால் எனப்படும் சுவர்களை 3 மடங்கு கூடுதல் செலவினமாக இருந்தாலும், மக்களின் உயிரே முக்கியம் என்பதால் அமைக்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
கோவை அரசு மருத்துவமனையில் பல்வேறு பிரச்சினைகள் இருந்தாலும், கொரோனா காலத்தில் உயிரைப் பணயம் வைத்து பணியாற்றிய மருத்துவர்களை மேலும் காயப்படுத்தாமல் இருக்க, அவற்றை விரைவில் தீர்வு ஏற்படுத்தப் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும் கோவை மாநகராட்சியில் கடந்த 2016-19 வரை நிர்ணயிக்கப்பட்ட இலக்கில் 71 சதவீதமான 71 கோடி ரூபாய் மட்டுமே எட்டப்பட்டுள்ளது குறித்து விவாதிக்கப்பட்டுள்ளதோடு, பழங்குடியின மக்களுக்கு வீடுகள் கட்ட வழங்கப்படும் 3 லட்சம் ரூபாய் போதுமானது அல்ல என்பதால் அதனை 5 லட்சம் ரூபாயாக உயர்த்த சட்டமன்றத்தில், குழுவில் உள்ள உறுப்பினர்கள் அனைவரும் கோரிக்கை விடுப்போம் எனவும் அவர் தெரிவித்தார்.