2016 ஆம் ஆண்டு கடனை அடைக்க தனது பெரியம்மாவை கொலை செய்து 7 பவுன் நகையை திருடிய குற்றத்திற்காக, ரவி பிரகாஷ் என்பவருக்கு இன்று கோவை குண்டு வெடிப்பு சிறப்பு நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டது.
கோவை: பொள்ளாச்சி, ஆனைமலை பகுதியை சேர்ந்த ரவி பிரகாஷ் என்பவர் 2016 ஆம் ஆண்டு கடனை அடைக்க தனது பெரியம்மாவை கொலை செய்து 7 பவுன் நகையை திருடிய குற்றத்திற்காக, இன்று அவருக்கு கோவை குண்டு வெடிப்பு சிறப்பு நீதிமன்றத்தில் இரட்டை ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.
கோவை ஆனைமலையை சேர்ந்த ரவி பிரகாஷ், என்பவர் தொழில் செய்து வந்துள்ளார். தனது தொழிலை விரிவுபடுத்துவதற்காக பலரிடம் கடன் பெற்றுள்ளார். கடன் பெற்று முதலீடு செய்தும், தொழிலில் போதிய வருவாய் கிடைக்காததால், கடன் கொடுத்தவர்கள் நெருக்கடி கொடுத்துள்ளனர்.
எனவே, கடனை அடைக்க வேண்டும் என முடிவு செய்த ரவிபிரகாஷ், 2016 ஆம் ஆண்டு தனியாக இருந்த தனது பெரியம்மா அருக்காணியை கழுத்தை இறுக்கி கொலை செய்து, அவரிடம் இருந்த 7 பவுன் நகைகளை திருடி விட்டு, அந்த நகையை அடமானம் வைத்து ரவிபிரகாஷ் கடனை அடைத்துள்ளார்.
சம்பவம் தொடர்பாக ஆனைமலை காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், 2 ஆண்டுகளுக்கு பின் 2018 ஆம் ஆண்டு ரவிபிரகாஷை கைது செய்தனர். வங்கியில் அடமானம் வைத்திருந்த திருடிய நகைகளை, மீட்டெடுக்கும் போது ரவி பிரகாஷ் காவல்துறையினரிடம் பிடிபட்டார்.
இந்த வழக்கு கோவை குண்டு வெடிப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இன்று ரவிபிரகாஷூக்கு இரட்டை ஆயுள் தண்டனை மற்றும் ரூபாய் 15 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி பாலு தீர்ப்பளித்தார்.