கோவை மற்றும் பொள்ளாச்சி வழியாக திருச்செந்தூர் ரயிலை இயக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்துக் கட்சியினர் கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்.
கோவை: கோவை மற்றும் பொள்ளாச்சி வழியாக திருச்செந்தூர் ரயிலை இயக்க வேண்டும், பொள்ளாச்சி கிணத்துக்கடவு ரயில் நிலையங்களை சேலம் கோட்டத்துடன் இணைக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்துக் கட்சியினர் கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் அவர்களது கோரிக்கைகளை வலியுறுத்தியும், மத்திய ரயில்வே கோவை மாவட்டத்தை புறக்கணிப்பதாகவும் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
இது குறித்து பேசிய தந்தை பெரியார் திராவிடர் கழக பொது செலயாளர் கு.இராமகிருட்டிணன் கூறுகையில்: பல்வேறு போராட்டங்களுக்கு பின் திண்டுக்கல் அகல ரயில் பாதை அமைக்கப்பட்டும், கோவை வழியாக ரயில்களை இயக்க ரயில்வே துறை மறுத்து கோவையை புறக்கணித்து வருகிறது. இதற்கு உதாரணமாக, திருச்செந்தூர் ரயிலை மேட்டுப்பாளையத்தில் இருந்து இயக்க கோரிக்கை வைத்தும், பாலக்காட்டில் இருந்து அந்த ரயில் இயக்கப்பட்டு வருகிறது.
எனவே, ரயில்வே துறையையும், அதனை ஆளும் மத்திய அரசையும் கண்டித்து இன்றைய ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. மேலும், பொள்ளாச்சி கிணத்துக்கடவு ரயில் நிலையங்களை சேலம் கோட்டத்தில் இணைக்க கோரிக்கை வைக்கிறோம், என்று கூறினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், தந்தை பெரியார் திராவிடர் கழகம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட், தமிழ் புலிகள், விடுதலை சிறுத்தைகள், மறுமலர்ச்சி திமுக, தமுமுக உட்பட 20க்கும் மேற்பட்ட கட்சி மற்றும் அமைப்புகளை சேர்ந்த 50க்கும் மேற்ப்பட்டோர் கலந்து கொண்டனர்.