ஒருங்கிணைந்த கோவை மாவட்ட திமுக சார்பில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் கொடிசியா மைதானத்தில் நடைபெற்றது.
கோவை: ஒருங்கிணைந்த கோவை மாவட்ட திமுக சார்பில் மாநகராட்சி,நகராட்சி, பேரூராட்சி மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் கொடிசியா மைதானத்தில் நடைபெற்றது.
இதில், திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உட்பட திமுக நிர்வாகிகள் தொண்டர்கள் என சுமார் பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, "தேர்தலிக்கு முன்பாக ஒரு தொகுதிக்கு 10,000 பேர் என 24 லட்சம் உறுப்பினர்களை சேர்த்து வரலாற்று சாதனை படைத்தவர் நமது சட்டமன்ற உறுப்பினர் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின். இனி வரும் நாட்களில், கோவை மாவட்டம் திமுக இளைஞரணி செயலாளர் தலைமையில், தளபதியின் கோட்டையாக மாறும் என்ற உறுதியை ஏற்றுள்ளோம்.

மேலும், கடந்த காலங்களில் வெற்றி பெற்றத்தை போல் சிலர் மாயபிம்பத்தை உருவாக்கி கொண்டிருக்கிறார்கள். அது ஒரு கானல் நீர் என்றும் அது எதற்கும் பயன்படாது. மேலும், கோவையில் இழந்த பெருமையை இளைஞரணி செயலாளர் மூலம் மீட்டெடுப்போம். வரக்கூடிய காலத்தில் மாநகராட்சி மேயர் உள்பட உள்ளாட்சி் பிரதிநிதிகள் பொறுப்பை திமுக வென்று தளபதி கையில் ஒப்படைப்போம் என்றசூளுரையை ஏற்போம். என்றார்.
பின்னர் சிறப்புரையாற்றிய உதயநிதி ஸ்டாலின், முதன்முதலில் கோவையில் தான் பூத் முகவர்கள் கூட்டம் இவ்வளவு பெரிய அளவில் நடத்தப்படுவதாக கூறினார். கோவை மக்களுக்கு குசும்பு அதிகம் என கூறிய அவர்,கோவையில் வரவேற்பு எல்லாம் சிறப்பாக இருக்கும், ஆனால் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் கோவை மக்கள் காலை வாரி விட்டீர்கள், என விமர்சித்தார்.

அப்போதைய அமைச்சர் வேலுமணி போன்றோர் மக்களுக்கு பணத்தை கொடுத்து விட்டனர். ஊழல் செய்தவர்கள் அனைவரும் உள்ளே செல்வார்கள் அதற்கான பணிகளும் தொடங்கி விட்டது என்றும் விரைவில் ஊழல்மணி (வேலுமணி) உள்ளே செல்வார் எனக் கூறினார். தமிழக முதல்வர் திமுகவிற்கு வாக்களித்தவர்களுக்கு மட்டுமின்றி வாக்களிக்காதவர்களுக்கும்சேர்த்து உழைத்து வருவதாகவும், நான் நம்பர் ஒன் என்பதில் பெருமை இல்லை, தமிழகம் நம்பர் ஒன் மாநிலமாக இருப்பது தான் பெருமை என்று முதல்வர் கூறுவதாகத் தெரிவித்தார்.
"முதல்வரின் கட்டளையை ஏற்று சுற்றி சுழன்று கோவையில் கொரோனா காலத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் பணியாற்றினர்.பெண்களுக்கு பேருந்தில் இலவச பயணம் வழங்குவோம் என்றோம், ஆனால் அதிமுகவினர் அதெல்லாம் முடியாது என்றனர். ஆனால் பதவி ஏற்ற 10 நாட்களில் பெண்களுக்கு பேருந்தில் இலவச பயண திட்டத்தை கொண்டு வந்தோம்.மக்கள் குறைகளை மனுக்களை தனது கவனத்திற்கு கொண்டு வரும் வகையில் இந்தியாவிலேயே முதன்முதலாக டேஷ் ஃபோர்டு வைத்து உள்ளவர் முதல்வர்.
சென்னை வெள்ளத்தில் முதல் ஆளாக அவர் நின்றார். அங்கு மட்டுமின்றி தமிழகம் முழுவதும் தொடர் மழையின் போது சுற்றுப்பயணம் மேற்கொண்டார். வருகின்ற நகர்புற உள்ளாட்சி தேர்தலில் 100 சதவீத வெற்றியை கொடுப்போம் என்று கோவை மக்கள் கூறியுள்ளீர்கள். தமிழ்நாட்டில் பாக முகவர்களுக்கு மினிட் புக் போட்டு கொடுக்கப்பட்டுள்ளது. கோவை மக்கள், அமைச்சர் செந்தில் பாலாஜி உடன் நெருக்கமாக இருங்கள். உங்களுக்கு தேவையானவற்றை அவர் செய்து கொடுப்பார்.
மேலும், நாங்கள் கோவையில் கோட்டை விட்டாலும் கோட்டையை பிடித்து விட்டோம். நம்முடைய அடுத்த இலக்கு கோவையில் திமுக 100 சதவீத வெற்றியை பெறுவது என்பது தான். அதுவரை ஓயக்கூடாது" என திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.

நிகழ்ச்சியின் துவக்கத்தில், அங்கு வந்திருந்த ஆண் குழந்தைக்கு உதய சூரியன் என பெயர் சூட்டினார். நிகழ்ச்சியின், முடிவில் மினிட் புக் என்ற குறிப்பேட்டை துவக்கி வைத்து விட்டு புறப்பட்டார். அப்போது, அவருடன் புகைப்படம் எடுப்பதற்கு தொண்டர்கள் மேடையில் கூடியதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.