ஊட்டி முத்தநாடுமந்தில் தோடர் இன மக்கள் ‘மொற் பர்த்’ பண்டிகையை கொண்டாடினார்கள். இதில் தோடர் இன மக்கள் வீரத்தை வெளிப்படுத்தும் வகையில், இளவட்டக்கல்லை தூக்கும் நிகழ்ச்சி நடந்தது.
நீலகிரி: ஊட்டி முத்தநாடுமந்தில் தோடர் இன மக்கள் ‘மொற் பர்த்’ பண்டிகையை கொண்டாடினார்கள்.
ஊட்டியில் புத்தாண்டை வரவேற்கும் தோடர் பழங்குடிகள் பண்டிகை "மொற் பர்த்" உதகை அருகே முத்தநாடு மந்தில் தோடர் இன மக்கள் ‘மொற்பர்த்’ பண்டிகையைக் கொண்டாடினர்.
மலை மாவட்டமான நீலகிரியில் வனப்பகுதிகளை ஒட்டி தோடர், கோத்தர், இருளர், பனியர், காட்டுநாயக்கர், குரும்பர் ஆகிய ஆதிவாசி இன மக்கள் வசித்து வருகின்றனர். இதில் தோடர் இன மக்கள் வசிக்கும் பகுதி மந்து என்று அழைக்கப்படுகிறது. இவர்களின் தலைமை இடமாக முத்தநாடு மந்து கருதப்படுகிறது.
முத்தநாடு மந்தில் மாவட்டம் முழுவதும் 72 மந்துகளில் வசிக்கும் தோடர் இன மக்கள் ஒன்று கூடி ஆண்டுதோறும் டிசம்பர் மாத இறுதியில், அல்லது ஜனவரி மாதத்தில் ‘மொற்பர்த்’ என்று அழைக்கப்படும் பண்டிகையைக் கொண்டாடுவது வழக்கம்.
அதன்படி நடப்பாண்டில் ஊட்டி அருகே உள்ள முத்தநாடு மந்தில் ‘மொற் பர்த்’ பண்டிகையைத் தோடர் இன மக்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். பண்டிகையை முன்னிட்டு தோடர் இன மக்கள் விரதம் இருந்து, மூன்போ என்ற கோவிலில் வழிபட்டனர்.
பின்னர் தோடர் இன மக்கள் மூன்போ கோவிலிலிருந்து ஊர்வலமாக அடையாள்வோ என்ற கோவிலுக்கு சென்றனர். அங்கு அவர்கள் தரையை நோக்கி குனிந்து வழிபட்டனர்.
இதையடுத்து தோடர் இன மக்கள் மீண்டும் மூன்போ கோவிலுக்கு சென்று பூசாரி மூலம் சிறப்பு பூஜையில் ஈடுபட்டனர். அதன் பிறகு அவர்கள் ஒவ்வொருவராக காணிக்கை மற்றும் நேர்த்திக்கடனை செலுத்தினார்கள்.
அவர்கள் அனைவரும் தங்களது பாரம்பரிய உடையணிந்து இருந்தனர்.
அதனை தொடர்ந்து மூன்போ கோவிலின் முன்பகுதியில் சுற்றி நின்றபடி தோடர் இன மக்கள் தங்களது பாரம்பரிய நடனம் ஆடி மகிழ்ந்தனர். இந்த பண்டிகையில் ஆண்கள் மட்டும் கலந்துகொண்டு கோவிலுக்கு சென்றனர்.
அதனை தொடர்ந்து தோடர் இன மக்கள் வீரத்தை வெளிப்படுத்தும் வகையில், இளவட்டக்கல்லை தூக்கும் நிகழ்ச்சி நடந்தது.