மருத்துவர் க. இராஜேந்திரன் எழுதிய 'தாய் - சேய்க்கான சத்தான உணவுகள்' நூல் வெளியீட்டு விழா கேஎம்சிஎச் மருத்துவமனை கலையரங்கில் இன்று நடந்தது.
கோவை: மருத்துவர் க. இராஜேந்திரன் எழுதிய 'தாய் - சேய்க்கான சத்தான உணவுகள்' நூல் வெளியீட்டு விழா கேஎம்சிஎச் மருத்துவமனை கலையரங்கில் இன்று நடந்தது.
கோவை மருத்துவ மையம் மற்றும் மருத்துவக் கல்லூரியின் தலைவர் டாக்டர் நல்ல பழனிசாமி தலைமை வகித்து நூலை வெளியிட்டார்.
இதுகுறித்து மருத்துவர் க. இராஜேந்திரன் பேசியதாவது:-
'உணவே மருந்து' - நம் முன்னோர் இயற்கையோடு இயைந்த வாழ்க்கை வாழ்ந்தனர். மக்கள் தங்களுக்கு இன்றியமையாத அடிப்படைத் தேவைகளுள் முதன்மையானது உணவு என்பதை உணர்த்திருந்தனர்.
இதனை, நீரின்றமையா யாக்கைக் கெல்லாம் உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத் தோரே உண்டி முதற்றே உணவின் பிண்டம் உணவெனப் படுவது நிலத்தொடு நீரேநீரு நிலனும் புணரி யோர் ஈண்டு உடம்பும் உயிரும் படைத்தி சினோரே (புறநானூறு 18) எனக் குடபுலவியனார் கூறுகிறார்.
மணிமேகலையும் உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத் தோரே எனக் கூறுகின்றது. உலகப்பொதுமறையான திருக்குறளும் மருந்து எனும் அதிகாரத்தில் உணவே மருந்து என்பதைத் தெளிவாகக் கூறியுள்ளது.
எனவே, தமிழர் மருத்துவத்தில் உணவும் மருந்தாகக் கருதப்படுகிறது. மக்களின் உண்ணும் உணவுப் பழக்கமே அவர்களது உடல் நலத்தைத் தீர்மானிக்கின்றது என்பது மிகையாகாது.

இதுவே தாய் - சேய்க்கான சத்தான உணவுகள் எனும் நூல் உருவாக வித்தாக அமைந்தது. இந்நூலில் ஒரு பெண்ணின் கர்ப்ப காலப் பரிசோதனைகள், பராமரிப்பின் நோக்கங்கள், பராமரிப்பின் போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் ஆகியன பற்றி விளக்கியுள்ளேன்.
மேலும் அக்கால கட்டத்தில் செய்ய வேண்டிய உடற்பயிற்சிகள் பற்றியும் உணவு முறைகள் பற்றியும் எப்போது மருத்துவர்களிடம் செல்ல வேண்டும் என்பது பற்றியும் தெளிவாக விளக்கியுள்ளேன்.
கர்ப்பிணிப் பெண்களுக்கான உணவுமுறைகள் பற்றியும் அக்காலக்கட்டத்தில் உடல் எடை குறைந்தாலோ அதிகரித்தாலோ என்னென்ன விளைவுகள் ஏற்படும் என்பது பற்றியும் கூறியுள்ளேன்.
அவ்வாறு ஏற்படும் தருணத்தில் அவர்களுக்கான உணவுகளையும் அவ்வுணவின் செய்முறைகளையும் படங்களுடன் விவரித்துள்ளேன். தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்குரிய உணவுகளை விளக்கி, தாய்ப்பாலின் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்துள்ளேன்.
மேலும் அத்தாய்ப்பாலிலுள்ள சத்துகளையும் அதனால் குழந்தைக்கு உண்டாகும் பயன்களையும் விரிவாகக் கூறியுள்ளேன். அதேபோல் எப்படித் தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்றும் குழந்தை பிறந்த எத்தனை மணி நேரத்திற்குள் கொடுக்க வேண்டும் என்றும் தாய்ப்பாலின் மகத்துவம் பற்றியும் விளக்கியுள்ளேன்.
தாய்ப்பால் கொடுக்கும் போது ஏற்படும் சிக்கல்களையும் அவற்றைக் கையாளும் வழிமுறைகளையும் பற்றியும் தொகுத்துரைத்துள்ளேன். குழந்தை தாய்ப்பால் குடித்துவரும் காலத்தில் இணை உணவினைக் கொடுக்கும்போது கவனிக்க வேண்டிய வழிமுறைகளையும் சுட்டிக்காட்டியுள்ளேன்.
தொடர்ந்து புதிய உணவின் அவசியத்தையும் அவ்வுணவினை அறிமுகப்படுத்தும்போது கையாள வேண்டிய நெறிமுறைகளையும் புதிய இணை உணவுகளைத் தயாரிக்கும் செயல்முறைகளையும் சேர்த்து இந்நூலில் விவரித்துள்ளேன்.
வயிற்றுப்போக்கு, வயிற்றுக்கடுப்பு ஆகியவற்றிற்கான அறிகுறிகளையும் காரணங்களையும் அவற்றைத் தடுப்பதற்கான வழிமுறைகளையும் கூறியுள்ளேன். மலச்சிக்கல், சிறுநீரகப்பாதிப்பு, கல்லீரல் பாதிப்பு ஆகிய குறைபாடுகள் உள்ள குழந்தைகளுக்குத் தேவையான உணவு முறைகளையும் தெளிவுபடுத்தியுள்ளேன்.
தீவிர ஊட்டச்சத்துக் குறைபாடுகள், உணவு விழுங்குவதில் உள்ள குறைபாடுகள், அவற்றிற்கான தீர்வுகள், உணவு வகைகள் ஆகியவற்றையும் கூறியுள்ளேன். உணவு, நீர் ஆகியவற்றின் வழியாகப் பரவும் நோய்களைப் பற்றியும் அவற்றைத் தடுக்கும் வழிமுறைகள் பற்றியும் விளக்கியுள்ளேன்.
விளையாட்டு வீரர்களுக்குத் தேவையான உணவு வகைகள், அல்லூண் வழி உணவு வகைகள், கரிம உணவுகள் (ஆர்கானிக் உணவுகள்), எதிர் ஆக்சிகரணி உணவுகள், ஆர்வ உணவுகள் முதலிய உணவுமுறைகளைப் பற்றியும் கூறியுள்ளேன்.
புற்றுநோய் உள்ள குழந்தைகளுக்கான உணவுகளையும் அவற்றை உண்ணும் முறைகளையும் சுட்டியுள்ளேன். சைவ உணவை மட்டும் விரும்பும் குழந்தைகளுக்கான உணவு வகைகளையும் துரித உணவு முதலியவற்றால் ஏற்படும் விளைவுகளைப் பற்றியும் விளக்கியுள்ளேன்.
தாய்க்கும் சேய்க்குமான ஓர் அறிவுப் பெட்டகமாக இந்நூல் விளங்கும் என நம்புகிறேன். இந்நூல் சிறப்பான முறையில் வெளிவர உறுதுணையாகவும் என் மருத்துவ உலகில் மகிழ்ச்சிக்கும் வளர்ச்சிக்கும் பெரிதும் காரணமாகவும் இருந்துவரும் எங்கள் கோவை மருத்துவ மையம் மற்றும் மருத்துவக் கல்லூரியின் தலைவர் டாக்டர் நல்ல பழனிசாமி அவர்களுக்கும் கோவை மருத்துவ மையத்தின் துணைத்தலைவர் டாக்டர் தவமணிதேவி பழனிசாமி அவர்களுக்கும் கோவை மருத்துவ மையத்தின் நிர்வாக இயக்குநரான டாக்டர் அருண் பழனிசாமி அவர்களுக்கும் என்னுடைய நெஞ்சார்ந்த நன்றிகள்.
இந்நூலுக்கு வாழ்த்துரை வழங்கிப் பெருமை சேர்த்த நல்லுள்ளங்களுக்கு எமது நன்றிகளை உரித்தாக்கி மகிழ்கின்றேன். நான் எடுத்துக் கொண்டிருக்கும் இம்முயற்சிக்கு நீங்கள் அளிக்கும் அன்பும் ஆதரவும் இன்னும் சிறப்புற மருத்துவப் பணியாற்ற எனக்குத் துணைபுரியும் என்று நம்புகின்றேன். நன்றி." இவ்வாறு மருத்துவர் க. இராஜேந்திரன் பேசினார்.
மருத்துவரை பற்றி:-

மருத்துவர் க. இராஜேந்திரன் அவர்கள் கோயம்புத்தூர் மருத்துவக்கல்லூரியில் எம்.பி.பி.எஸ்., மெட்ராஸ் மருத்துக்கல்லூரியில் குழந்தை மருத்துவத்தில் எம்.டி.யும் முடித்தவர்.
அமெரிக்காவில் உள்ள பாஸ்டன் பல்கலைக்கழகத்தில் குழந்தைகளுக்கான ஊட்டச்சத்துத்துறையில் முதுநிலை பட்டயச் சான்றிதழ் படிப்பை முடித்துள்ளார். இவர் ஜிப்மர் மருத்துவமனையில் பயிற்சி பெற்று, கோவை மசானிக் குழந்தைகள் மருத்துவமனையில் உதவித் தலைமை மருத்துவ அதிகாரியாகப் பணியாற்றி அனுபவம் பெற்றவர்.
தற்போது கோவை மருத்துவ மையம் மற்றும் மருத்துவமனையில் பேராசிரியர் மற்றும் துறைத் தலைவராகவும் குழந்தைகள் மற்றும் சிசுநலச் சிறப்புப் பிரிவு மருத்துவராகவும் பணியாற்றி வருகிறார்.
இவர் இந்திய குழந்தை மருத்துவக் குழுமத்தின் கோவை மாவட்டப்பிரிவின் முன்னாள் தலைவராகவும் செயலாளராகவும் பணியாற்றினார். மேலும், தமிழ்நாடு மாநிலப்பிரிவின் முன்னாள் பொருளாளராகவும் தற்போது செயலாளராகவும் பணியாற்றி வருகிறார்.
இவர் குழந்தைகள் நலம் பற்றி எழுபதுக்கு மேற்பட்ட கட்டுரைகளை வெளியிட்டுள்ளார்; குழந்தை நல மருத்துவ இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்பிற்கான துறைத் தலைவராகவும் ஆய்வு மாணவர்களுக்கு வழிகாட்டியாகவும் டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத் தொழில்முறைப் பயிற்சி மாணவர்களுக்குப் பேராசிரியராகவும் இருந்து வருகிறார்.