மக்களிடையே தொடர்ந்து மதவெறி உணர்வுகளையும், வெறுப்பு அரசியலையும் ராஷ்ட்ர சேவிகா சம்தி அமைப்பு தூண்டி வருவதாக குற்றம் சாட்டியுள்ளனர்.
கோவை: கோவையில் ஆர்.எஸ்.எஸ் நடத்தும் பயிற்சி முகாமை தடுத்து நிறுத்தக்கோரி தந்தை பெரியார் திராவிட கழகம் சார்பாக மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.
இந்த மனு குறித்து தந்தை பெரியார் திராவிட கழக தலைவர் கு. ராமகிருஷ்ணன் கூறுகையில்;-
ஆர்.எஸ்.எஸ்.யின் துணை அமைப்பான ராஷ்ட்ர சேவிகா சம்தி என்கிற இந்துத்துவா அமைப்பின் பயிற்சி முகாம் கோவை தனியார் கல்லூரியில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மக்களிடையே தொடர்ந்து மதவெறி உணர்வுகளையும், வெறுப்பு அரசியலையும் ராஷ்ட்ர சேவிகா சம்தி அமைப்பு தூண்டி வருகிறது.
இந்த அமைப்பு 13 வயதுக்கு மேற்பட்ட ஆரோக்கியமான பெண்கள் பங்கேற்கலாம் என்றும், பயிற்சி செய்வதற்கு சுடிதார் கண்டிப்பாக கொண்டுவரவும் என்றும் நிபந்தனை விதித்து இருப்பதாகவும், தமிழக அரசுக்கும், அனைத்து மக்களுக்கும், சிறுபான்மையின மக்களுக்கு எதிராக ஆயுதப் பயிற்சியை மேற்கொள்ள திட்டமிட்டிருப்பது உறுதியாகிறது.
கோவையில் மதக்கலவரங்கள் நடப்பதற்கான அபாயகரமான பகுதியாக உள்ளது. எனவே, தனியார் கல்லூரியில் ராஷ்ட்ர சேவிகா சம்தி அமைப்பின் மதவெறி ஆயுதப் பயிற்சியை தடுத்து நிறுத்தவேண்டும் என்று தெரிவித்தார்
இதில் தந்தை பெரியார் திராவிட கழக தலைவர் கு.ராமகிருஷ்ணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், விடுதலை சிறுத்தைகள், ஆதித்தமிழர் பேரவை, திராவிடர் விடுதலைக் கழகம், மக்கள் அதிகாரம் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் மனுவை அளித்தனர்.