கோவையில் பள்ளி மாணவிகளுக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய கணினி அறிவியல் ஆசிரியரைக் கைது செய்யக் கோரி மாணவ-மாணவிகள் பள்ளி வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.
கோவை: கோவையில் பள்ளி மாணவிகளுக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய கணினி அறிவியல் ஆசிரியரைக் கைது செய்யக் கோரி, கோவை வெள்ளலூர் பகுதியில் உள்ள மாணவ-மாணவிகள் பள்ளி வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கொரோனா பரவலைக் கருத்தில் கொண்டு தமிழகம் முழுவதும் பள்ளிகளில் ஆன்லைன் வகுப்பு நடத்தப்படுகிறது. இந்த ஆன்லைன் வகுப்புகளில், சில ஆசிரியர்கள் மாணவ மாணவிகளிடம் ஆபாசமாகப் பேசுவது, ஆபாச வீடியோக்களை அனுப்புவது போன்ற குற்றச்சாட்டுகள் எழுந்து வரும் நிலையில், கோவை போத்தனூரில் அடுத்த வெள்ளலூர் பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகள் இதே போன்ற குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதில் பணியாற்றும் கணினி அறிவியல் ஆசிரியர் பதினொன்றாம் வகுப்பு பயிலும் மாணவிகளுக்கு செல்போனில் ஆபாச குறுஞ்செய்தி அனுப்புவதாகவும், வீடியோ காலில் வரச் சொல்லியும் புகைப்படங்கள் அனுப்பச் சொல்லியும் ஆபாச வார்த்தைகளால் புகைப்படம் அனுப்பினால் மட்டுமே இன்டர்னல் மார்க் தரப்படும் எனக்கூறி மிரட்டுவதாக அப்பள்ளி மாணவ-மாணவிகள் கல்லூரி வளாகத்தினுள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து, மாணவிகள் கூறும்போது, கடந்த சில நாட்களாகவே கணினி அறிவியல் ஆசிரியர் மாணவிகளுக்குத் தொடர்ந்து ஆபாச குறுஞ்செய்திகள் அனுப்புவதாகவும், இரவு நேரங்களில் வீடியோ கால் வரச்சொல்லி உடைகள் இல்லாமலும், வீடியோ மற்றும் போட்டோ அனுப்பச் சொல்வதாகும், இல்லை என்றால் தங்களுக்கு வழங்கப்படும் இன்டர்னல் மார்க் குறைத்து விடுவதாக மிரட்டுவதாகவும் குற்றம்சாட்டினர்.
மேலும் இது தொடர்பாகப் பள்ளி தலைமை ஆசிரியரிடம் பலமுறை புகார் அளித்தும் இதுவரை பள்ளி தலைமை ஆசிரியர் எந்த வித நடவடிக்கையும் எடுக்காமல் அந்த ஆசிரியருக்குச் சாதகமாகச் செயல்படுவதாகவும் குற்றம் சாட்டினர்.
மேலும் கடந்த சில நாட்களாகவே போக்சோ குறித்தும் நல்ல தொடுதல் கெட்ட தொடுதல் போன்றவை குறித்தும் மாணவ-மாணவிகளுக்கு நல்ல விழிப்புணர்வை ஏற்படுத்தப் பட்டுள்ளதாகவும் தெரிவித்தவர்கள்.
தமிழக அரசு உடனடியாக அனைத்து ஆசிரியர்களுக்கும் போக்சோ வழக்குகள் குறித்தும் நல்ல தொடுதல் கெட்ட தொடுதல் மற்றும் பேசுவது பழகுவது தொடர்பாக விழிப்புணர்வுகளை ஆசிரியர்களுக்கு கற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.
மேலும், பள்ளி மாணவர்கள் போராட்டத்தின் காரணமாகக் காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாகத் தலைமை ஆசிரியர், காவல்துறை, மற்றும் மாவட்ட பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.