டி-23 புலியை தமிழ்நாட்டிற்கு மாற்றத் திட்டமில்லை: தமிழ்நாடு வனத்துறை

கர்நாடகாவிலுள்ள மைசூரு வன உயிரினப் பூங்காவிலிருந்து டி-23 புலியை தற்போது தமிழ்நாட்டில் உள்ள வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு மாற்றத் திட்டமில்லை எனத் தமிழ்நாடு வனத்துறை தெரிவித்துள்ளது.



கோவை: கர்நாடகாவிலுள்ள மைசூரு வன உயிரினப் பூங்காவிலிருந்து டி-23 புலியை தற்போது தமிழ்நாட்டில் உள்ள வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு மாற்றத் திட்டமில்லை எனத் தமிழ்நாடு வனத்துறை தெரிவித்துள்ளது.

மேலும் டி-23 புலியின் உடல் நலம் நல்ல முறையில் தேறி வருவதாகவும், தேவைக்கான உணவுகளை எடுத்துக் கொள்வதாகவும் தமிழ்நாடு வனத்துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

வன விலங்கு ஆர்வலர்கள் இந்த டி-23 புலி முழுமையாகக் குணமடைந்தவுடன் வன விலங்கு மனோதத்துவ மருத்துவர்களின் கருத்துக்கள், உதவியுடன் அடர்த்தியான காடுகளுக்கோ அல்லது புலிகள் சரணாலயங்களுக்கோ மாற்றப்படலாம் என ஆலோசனை கூறுகின்றனர்.

கடந்த அக்டோபர் மாதம் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மசினகுடி மற்றும் கூடலூர் அருகே உள்ள வனப்பகுதிகளில் நான்கு பேரை இந்தப் புலி தாக்கி கொன்றது.

மேலும், அப்பகுதியில் உள்ள 30க்கும் மேற்பட்ட கால்நடைகளை வேட்டையாடியது. இதனால் இந்தப் புலியை வனத்துறை சுட்டுப் பிடிக்க முயற்சியில் ஈடுபட்ட போது, சென்னை உயர்நீதி மன்றத்தில் விலங்கு ஆர்வலரால் வழக்கு தொடரப்பட்ட நிலையில், நீதிமன்றம் டி-23 புலியை உயிரோடு பிடிக்க வனத்துறைக்கு உத்தரவிட்டது.

அதன் பின்னர் 22 நாள்கள் தேடுதல் வேட்டைக்குப் பின் வனத்துறை அலுவலர்கள், விலங்கு ஆர்வலர்கள் மற்றும் தன்னார்வலர்களின் உதவியுடன் மசினகுடி பகுதியில் மயக்க ஊசி புலிக்குச் செலுத்திப் பிடிக்கப்பட்டது.

மேலும், இந்தப் புலி தேடுதல் வேட்டையின் போது பலத்த காயமடைந்தது என்பது தெரியவந்ததையடுத்து, சிகிச்சைக்காக வனத்துறையினர் கர்நாடகாவில் உள்ள மைசூரு வன உயிரினப் பூங்காவிற்குக் கொண்டு சென்று தொடர்ந்து கண்காணித்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இது குறித்து தமிழ்நாட்டின் தலைமை வனப் பாதுகாவலர் சேகர் குமார் நீரஜ் நம்மிடம் கூறுகையில், "தொடக்கத்தில் டி-23 புலி சிறிதளவே உணவை எடுத்துக் கொண்டது. மேலும், 10க்கும் மேற்பட்ட காயங்கள் இருந்ததால் நடக்கக் கூட இயலவில்லை.

இதனையடுத்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் புலியின் உடல் நிலை தற்போது தேறி வருகிறது. புலிக்கு உணவாகச் செவ்வாய்க்கிழமை தவிர நாள் ஒன்றுக்கு 15 கிலோ மாட்டிறைச்சி கொடுக்கப்படுகிறது” என கூறினார்.

இதன் பின்னர், டி-23 புலி நன்கு குணமடைந்தவுடன் தமிழ்நாட்டிற்குக் கொண்டுவரப்படுமா என்ற கேள்விக்கு, தற்போது அதற்கான திட்டமில்லை எனவும் புலியின் உடல் நலத்தில் கவனம் செலுத்தி வருவதாகவும் நீரஜ் எடுத்துரைத்தார்.

இதனிடையே வன விலங்கு ஆர்வலர்களின் கூற்றுப்படி, இந்த டி-23 புலியின் நடத்தை மற்றும் உளவியல் ரீதியான பிரச்சினைகளை அறிந்து கொண்ட பின்பு இதனை மாற்று இடத்திற்குக் கொண்டு செல்லலாம் என கூறியுள்ளனர்.

கொ. அசோக சக்கரவர்த்தி, வன விலங்கு ஆராய்ச்சியாளர் கூறுகையில், "மாற்று இடத்திற்குக் கொண்டு செல்லும் முன் புலியின் நடத்தைகளை ஆய்வு செய்ய வேண்டும். மேலும், தினமும் புலிகளைப் பற்றி ஆய்வு செய்யும் வல்லுநர்கள், வன உயிரின மருத்துவர்கள் மற்றும் வன அலுவலர்கள் உள்ளிட்டவர்களைக் கொண்டு ஆராய்ந்து பிறகே புலியை வேறு இடத்திற்கு மாற்றலாம். மேலும், மாற்றுமிடம் அருகில் மனிதர்களின் இருப்பிடமோ அல்லது கால்நடைகளுக்கான மேய்ச்சல் இடமோ இருக்கக்கூடாது," என குறிப்பிட்டார்.

தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் மற்றும் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதல்களின் படி ஒரு புலியை ஒரு வன உயிரியல் பூங்காவிலிருந்து llமற்றொரு வன உயிரியல் பூங்காவிற்குக் கொண்டு செல்ல வேண்டுமானால் சில விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.

வேறு இடத்திற்கு மாற்றுவதற்கு முன் ஒரு குழுவை அமைக்க வேண்டும். அந்தக் குழுவில் தலைமை வன உயிரியல் பாதுகாவலர் தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்திலிருந்து ஒரு நபர் புலிகளைப் பற்றி நன்கு தெரிந்த ஒரு வல்லுநர் வனவிலங்கு மருத்துவர் மற்றும் வனவிலங்கு உயிரியலாளர் காடுகளின் கலை இயக்குனர் உள்ளடக்கிய நபர்கள் இந்த குழுவில் இடம்பெறுவார்கள்.

மேலும், இந்தக் குழு புலிகளை வேறு இடத்திற்கு மாற்றுவதற்கு முன்பாக அதனுடைய உடல் நலத்தைப் பரிசோதிக்க வேண்டும். குறிப்பாகக் கடந்த ஒரு வாரத்தில் அதனுடைய உடல் நலம் எப்படி இருந்தது, அதனுடைய ரத்த அழுத்தம் எவ்வாறு இருக்கிறது, அந்தப் புலி உண்ணும் உணவுகளை எந்த அளவு எடுத்துக் கொள்கிறது என ஆய்வு செய்ய வேண்டும்.

புலியை வேறு இடத்திற்கு மாற்றுவதற்கு ஒரு பெரிய கனரக வாகனத்தை எடுக்க வேண்டும். இதில் ஒரு மிகப்பெரிய காற்றோட்டமுள்ள கூண்டில் புலியை அடைக்க வேண்டும். மேலும், ஒரு வன உயிரின மருத்துவர் இந்த வாகனத்தில் பயணம் செய்ய வேண்டும். வாகனம் சென்று கொண்டிருக்கையில் புலிகளுக்கு ஏதேனும் நாவறட்சி ஏற்படும் போது அதற்கான மருந்துகளைக் கொடுக்க வேண்டும்.

பொதுவாக ஒரு உயிரியல் பூங்காவிலிருந்து மற்ற உயிரியல் பூங்காவிற்கு எந்த வனவிலங்குகளும் 24 மணி நேரத்திற்குள் கொண்டு செல்ல வேண்டும்.

மேலும் இப்படிக் கொண்டு செல்லும் போது பல்வேறு கருவிகள் குறிப்பாக ஜி.பி.எஸ்., வயர்லெஸ் நெட்வொர்க் தகவல்கள் பரிமாற்றத்திற்காக அல்லது ஏதேனும் ஒரு அவசர தேவைக்காகப் பயன்படுத்த வேண்டும்.

Newsletter

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...