மூலப்பொருட்கள் விலை உயர்வைக் கண்டித்து நாடு முழுவதும் தொழில் முனைவோர் வரும் 20-ம் தேதி முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட இருக்கின்றன. இதில் தமிழகத்தில் 100-சதவீதம் சிறு-குறு தொழில்கள் முழு அடைப்பில் பங்கேற்க இருப்பதாகக் கோவையில் அனைத்து தொழில் கூட்டமைப்பு நிர்வாகிகள் அறிவித்துள்ளனர்.
கோவை: மூலப்பொருட்கள் விலை உயர்வைக் கண்டித்து, கோவையில் நடத்தப்படும் போராட்டம் குறித்து தொழில் கூட்டமைப்பு நிர்வாகிகள் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
அப்போது பேசிய கூட்டமைப்பின் நிர்வாகி ராமமூர்த்தி கூறுகையில்,
வரும் 20-ம் தேதி போராட்டத்தில் கோவையில் உள்ள CRI, TEXMO, PRICOL உட்பட அனைத்து நிறுவனங்களும் முழு அடைப்பில் பங்கேற்க இருப்பதாகவும், தமிழகத்தில் 100 சதவீதம் சிறு-குறு தொழில்கள் முழு அடைப்பு இருக்கும் என்று தெரிவித்தார்.
அகில இந்திய அளவில் 250-அமைப்புகள் இந்த முழு அடைப்பில் பங்கேற்க இருப்பதாகவும் இந்த மூலப்பொருட்கள் விலை 30-முதல் 200-சதவீதம் வரை உயர்ந்து இருக்கின்றது. அதேபோல் பம்ப்செட் தொழில் கடும் மந்த நிலையை அடைந்து இருக்கின்றது. தொழில் முனைவோருக்கு உற்பத்தி செலவு 40-சதவீதம் அதிகரித்துள்ளது.
எனவே மத்திய அரசு இதில் தலையிட்டு மூலப்பொருட்கள் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றும் மூலப்பொருட்கள் விலையேற்றத்தால் பொதுமக்களும் பாதிக்கப்படுகிறார்கள் என்றும் கூட்டமைப்பின் நிர்வாகிகள் தெரிவித்தனர்.
வெங்காயம் போன்ற பொருட்கள் விலையேறிய போது வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதை நிறுத்திவிட்டு வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்தது போல் தொழில் முனைவோருக்குத் தேவையான இரும்பு மற்றும் பல்வேறு மூலப்பொருட்களை ஏற்றுமதி செய்வதை நிறுத்த வேண்டும் என்றும் இந்தியாவில் மனித வளம் அதிகமுள்ள நிலையில் உள்நாட்டு தேவைக்கு ஏற்றார் போல் ஏற்றுமதியைக் குறைக்க வேண்டும் அல்லது நிறுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.
மேலும் இந்த கொரோனா மற்றும் மூலப்பொருட்களின் விலையேற்றக் காரணத்தால் கடந்த மூன்று வருடங்களில் ஒரு நிறுவனம் 6-மாதம் மட்டுமே செயல்பட்டுள்ளது அதேசமயம் தொழிலாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்துள்ளோம் எனக்குறிப்பிட்டவர்கள் மூலப்பொருட்களின் விலையை நிர்ணயம் செய்ய கமிட்டி அமைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.
இந்திய அளவில் இந்த ஒரு நாள் முழு அடைப்பு போராட்டத்தால் 25000-கோடி உற்பத்தி பாதிக்கப்படும் என்றும் கோவையைப் பொறுத்தமட்டில் அன்று 1500-கோடி உற்பத்தி பாதிக்கப்படும் என்று கூட்டமைப்பு நிர்வாகிகள் தெரிவித்தனர்.