விசாரணை குறித்து காவல்துறையினர், பெற்றோர்களுக்கு தகவல் ஏதும் தெரிவிக்கப்படவில்லை என குற்றம்சாட்டி, சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர்: திருப்பூரிலுள்ள தனியார் பள்ளியில், 5 வயது குழந்தைக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக கூறி உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
திருப்பூர் - பூலுவப்பட்டி சாலை, கே.ஜி.புதூரில் தனியார் மெட்ரிக் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் பயிலும் 5 வயது பெண் குழந்தைக்கு கடந்த 14 ஆம் தேதி பாலியல் தொந்தரவு அளிக்கப்பட்டதாக, நேற்று காவல்துறையிடம் பெற்றோர் புகார் அளித்தனர்.
புகாரினை தொடர்ந்து திருப்பூர் வடக்கு மகளிர் போலீசார் பள்ளியில் வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், இன்று மாலை வரை என்ன விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என காவல்துறை தரப்பிலிருந்து குழந்தையின் பெற்றோர்களுக்கு தகவல் ஏதும் தெரிவிக்கப்படவில்லை என குற்றம்சாட்டி, குழந்தையின் உறவினர்கள் மற்றும் பொது மக்கள் பள்ளியின் முன்பாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கவும், குற்றவாளியை கைது செய்ய தாமதபடுத்துவதாகவும் கூறி போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், பள்ளியின் அனைத்து சிசிடிவிகளையும் ஆய்வு செய்துவிட்டதாகவும், அப்படி ஒரு சம்பவம் பள்ளியில் நடைபெறவில்லை என்றும், சிசிடிவி காட்சி பதிவுகளை காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளதாகவும் பள்ளி நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
பாலியல் புகார் தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.