இந்த ஆர்ப்பாட்டத்திற்கு புறநகர் தெற்கு மாவட்ட செயலாளரும், எதிர்கட்சி கொறடாவும், எம்.எல்.ஏ.,வுமான எஸ்.பி.வேலுமணி தலைமை தாங்கினார்.
கோவை: கோவையில் மக்கள் பணிகளை செய்யாத திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மக்கள் பிரச்சனையில் கவனம் செலுத்தாத திமுக அரசையும், கோவை மாநகராட்சியையும் கண்டித்து கோவை மாவட்ட அதிமுக சார்பில் கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு புறநகர் தெற்கு மாவட்ட செயலாளரும், எதிர்கட்சி கொறடாவும், எம்.எல்.ஏ.,வுமான எஸ்.பி.வேலுமணி தலைமை தாங்கினார்.
இதில் முன்னாள் சபாநாயகர் தனபால், எம்.எல்.ஏ.,க்கள் அம்மன் அர்ஜூனன், பி.ஆர்.ஜி அருண்குமார், ஏ.கே செல்வராஜ், கே.ஆர்.ஜெயராம், சூலூர் கந்தசாமி, தாமோதரன், அமுல் கந்தசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் புறநகர் தெற்கு மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞரணி செயலாளர் என்ஜினீயர் சந்திரசேகர் உட்பட 10 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் எம்எல்ஏ எஸ்.பி.வேலுமணி பேசியதாவது:-
கோவை மாவட்டமே திரண்டு வந்து இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறது. இந்த கூட்டத்திற்கு தலைவணங்குகிறேன்.
அதிமுக எழுச்சி பெற்றால் யாரும் தாங்க மாட்டீர்கள். ஆட்சி அமைத்த 7 மாதங்களில் மிகப்பெரிய எதிர்ப்பை திமுக அரசு சந்தித்துள்ளது.
தேர்தலின் போது 525 வாக்குறுதி கொடுத்தார்கள். ஒரு சிலவற்றை மட்டும் நிறைவேற்றிவிட்டு அதில் முக்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் இருக்கிறார்கள்.
டீசல், பெட்ரோல் மீதான வாட் வரியை குறைக்க வேண்டும். டீசல் விலையை குறைத்தால் தான் விலைவாசி குறையும்.
திமுக ஆட்சி அமைந்ததும் நீட் தேர்வை ரத்து செய்வோம் என்றார்கள். ஆனால், இன்று கூட நீட் தேர்வு காரணமாக இரு மாணவர் இறந்துவிட்டார்.
முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மருத்துவ மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு செய்தவர். நீட் காரணமாக யாரும் தற்கொலை செய்யக்கூடாது. பெற்றோர்களை நினைத்துப் பார்க்க வேண்டும்.
இந்த ஆட்சியில் பத்திரிக்கைகள் மிரட்டப்படுகின்றன. கடந்த 7 மாதங்களில் திமுகவினர் எதுவும் செய்யவில்லை. அதிமுக கொண்டுவந்த திட்டங்களை மட்டும் தான் செயல்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
கோவையில் 50 ஆண்டுகள் இல்லாத வளர்ச்சியை கொடுத்துள்ளோம் என்று நெஞ்சை நிமிர்த்திச் சொல்வோம். கோவைக்கு முழுமையான வளர்ச்சியை கொடுத்ததனால் தான் இங்குள்ள அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற்றோம்.
கோவை அரசு மருத்துவமனை, ஆட்சியர் அலுவலகம், கண்காணிப்பாளர் அலுவலகம் மேம்படுத்தியுள்ளோம். இப்போது ஸ்மார்ட் சிட்டி பணிகள் உட்பட பல டெண்டர்களை நிறுத்தி வைத்துள்ளனர்.
கோவையில் அதிமுக வெற்றி பெற்றதால் இந்த மாவட்டம் புறக்கணிக்கப்படுகிறது. செங்கல் தொழிலில் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் உள்ளனர். தற்போது அந்த தொழில் முடக்கப்பட்டுள்ளது.
கடந்த 10 ஆண்டுகளில் கோவையில் கட்டப்பஞ்சாயத்து வசூல், கந்துவட்டி பிரச்சனை இல்லை. போலீசார் சரியாக வேலை செய்தனர். ஆனால், இப்போது போலீசார் தேவையில்லாத வேலைகளை செய்கின்றனர். திமுக ஆட்சி நிலைக்காது. அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வரும். போலீசார் நடுநிலையோடு செயல்பட வேண்டும். இல்லையென்றால் ஒரு நிமிடத்தில் ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிடுவோம்.
மு.க.ஸ்டாலின் ரெய்டுகள் மூலமும், பொய் வழக்குகள் மூலமும் மிரட்டிப்பார்க்கிறார். எதற்கும் தயாராக இருக்கிறோம். திமுக என்ன தப்பு செய்தாலும் தட்டிக்கேட்கும். ஸ்டாலினை எதிர்த்துப் பேசினால் என்னென்ன பொய் வழக்கு போடலாம் என்று ரூம் போட்டு யோசிக்கிறார்கள். ஆனால் மக்கள் எங்களோடு உள்ளனர் என்றார்.
பாலங்கள், மெட்ரோ ரயில் அறிவிப்பு, ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் என அனைத்து திட்டங்களையும் கொடுத்துள்ளோம், அதை முறையாக செயல்படுத்துங்கள். மழைக்காலத்தில் மக்கள் சாலைகளில் கீழே விழுகின்றனர். மாநகராட்சி நிர்வாகம் இப்போது தூங்கக் கூடாது.
மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடந்த திமுக ஆட்சியில் 9 ஆயிரத்து 838 கோடி வழங்கப்பட்டது. ஆனால், அதிமுக ஆட்சியில் 1 லட்சம் கோடி கடன் கொடுத்துள்ளோம்.
சென்னையில் கடந்தாண்டு மழை பெய்த போது மழை நீர் தேங்கவில்லை. இந்தாண்டு முறையாக தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளாததால் மழை நீர் தேங்கியுள்ளது.
கோவை அமைதியான ஊராக இருந்தது, ஆனால், இப்போது ஊரில் அமைதி இல்லை, தொழில் செய்ய முடியவில்லை. தொட்டதுக்கெல்லாம் வசூலுக்கு வருகிறார்கள்.
எனவே, பெட்ரோல் டீசல் வரியை குறைக்க வேண்டும்,, மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும், விவசாயிகளுக்கான நிதியை கொடுக்க வேண்டும்.
இந்த ஆட்சியில் 500க்கும் மேற்பட்ட கொலைகள் நடந்துள்ளது. எனவே, சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டும் என்று கூறினார்.
அதிமுக தொண்டர்கள் மீது பொய்வழக்கு போடுவதை நிறுத்த வேண்டும். அரசுப் போக்குவரத்து கழகத்தில் எங்கள் தொழிற்சங்கத்தை பழிவாங்குகிறார்கள்.
பொங்கலுக்கு 2500 ரூ கொடுத்தோம். கொரோனா காலம் என்பதால் ரூ.5 ஆயிரம் தர வேண்டும். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை நிறுத்தாதீர்கள். சிரமப்பட்டு கொண்டு வந்த திட்டங்களாகும். மெட்ரோ ரயில் திட்டத்திற்கு உதவ மத்திய அரசு தயாராக இருக்கின்றது. இந்த அரசு விழித்துக்கொள்ள வேண்டும். மேலும், அரிசி உள்ளிட்ட பொருட்கள் விலையை கட்டுப்படுத்த வேண்டும்.
அதேபோல, பத்திரிகையாளர்களை மிரட்டினால் ஆட்சி மாற்றத்திற்குக் காரணமாக அவர்கள் தான் இருப்பார்கள். போலீசை வைத்து மிரட்டுவதால் அதிகாரிகள் தற்கொலை செய்து கொள்வது அதிகமாகியுள்ளது. திட்டங்களை நிறைவேற்றவில்லை என்றால் மீண்டும் மக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.