கோவை ரயில் நிலையம் எதிரில் உள்ள பேங்க் ஆப் பரோடா வங்கியில் மத்திய அரசின் இந்த கொள்கை முடிவை எதிர்த்து பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கோவை: இரண்டு பொதுத்துறை வங்கிகள் உள்ளிட்ட அரசு வங்கிகளை தனியார்மயமாக்கும் மத்திய அரசு நடவடிக்கையை எதிர்த்து கோவையில் வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மத்திய அரசு சில தினங்களாகவே அரசு வங்கிகளை தனியார்மயமாக்கும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. இதற்கு அரசு வங்கி ஊழியர்கள் சார்பில் பெரும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில், நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் வங்கி ஊழியர்கள் மத்திய அரசின் இந்த கொள்கை முடிவை கண்டித்து ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், இன்றும் நாளையும் அகில இந்திய வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்திருந்தனர். அதன்படி இன்று கோவையில் அகில இந்திய வேலை நிறுத்தம் நடைபெற்று வருகிறது.
கோவை ரயில் நிலையம் எதிரில் உள்ள பேங்க் ஆப் பரோடா வங்கியில் மத்திய அரசின் இந்த கொள்கை முடிவை எதிர்த்து பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. UNITED FORUM OF BANK UNIONS ன் 9 தொழிற்சங்க அமைப்புகள் (AIBEA, AIBOC, NCBA, AIBOA, BEFI, INBEF, INBOC, NOBW, NOBO) இந்த ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர். இதில் கலந்து கொண்ட ஊழியர்கள் மத்திய அரசின் இந்த முடிவை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.
மத்திய அரசு எந்த ஆலோசனையும் மேற்கொள்ளாமல் இந்த முடிவை எடுத்திருப்பதாகவும், பொதுத்துறை வங்கிகளின் பங்குகளை குறைப்பதற்காக இந்த அரசாங்கம் முயன்று வருவதாக குற்றம்சாட்டினர். சர்வாதிகார அரசாக இந்த அரசாங்கம் உள்ளதாகவும் விமர்சித்தனர்.
மேலும், நிர்மலா சீதாராமன் இரண்டு வங்கிகள் தனியார்மயமாக்கப்படும் என்றும் அதனை ரகசியமாக வைத்துள்ளதாக தெரிவித்த அவர்கள், அதனை கண்டித்து தான் முக்கியமாக இந்த இரண்டு நாள் போராட்டம் நடத்தப்படுவதாக கூறினர்.
இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக ரூ.8000 கோடி இழப்பு ஏற்படும் எனவும் கோவையை பொருத்தவரை ரூ. 300 கோடி இழப்பு ஏற்பட கூடும் என்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் தெரிவித்தனர்.