பொது இடங்களில் போஸ்டர் ஒட்டுவது சட்டவிரோதமானது எனவும் தனது முதல் வாக்குறுதியாக, போஸ்டர் ஒட்டுவதில்லை என்று முடிவெடுத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
கோவை: பொது இடங்களில் போஸ்டர் ஒட்டுவது சட்டவிரோதமானது எனவும் போஸ்டர் கலாச்சாரத்தை கைவிட வேண்டும் என்று கோவை மாவட்டத்தின் முக்கிய அரசியல்வாதிகளுக்கு பாமக மாவட்ட செயலாளர் அசோக் ஸ்ரீநிதி கடிதம் எழுதியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கோவை மாவட்டத்தில் தற்போது அனைத்து பொது சுவரிலும், பாலத்திலும் போஸ்டர் ஒட்டப்பட்டு, அசிங்கமாகவும் அசுத்தமாகவும் காட்சியளிக்கிறது. இந்த போஸ்டர் கலாச்சாரத்தை உடனடியாக ஒழிக்க வேண்டும். இந்த போஸ்டர்கள் அனைத்துமே அரசியல்வாதிகளின் விளம்பரங்களே.
நான் பாமகவின் மாவட்ட செயலாளராக பொறுப்பேற்றுள்ளேன். எனது முதல் வாக்குறுதியாக, போஸ்டர் ஒட்டுவதில்லை என்று முடிவெடுத்துள்ளேன். இப்படி அனைத்து அரசியால்வாத்களும் முடிவெடுத்தால் நமது கோவை மாநகரம் சுத்தமாகவும் அழகாகவும் மாறும் என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பொது இடங்களில் போஸ்டர் ஒட்டுவது சட்டப்படி குற்றமாகும். இதையே நமது சட்டம் (Prevention of Disfigurement Act) திறந்தவெளி அழகைக் குலைத்தலைத் தடுத்தல் சட்டம் சொல்கிறது.
அதேபோல, டெல்லி உயர் நீதிமன்றமும் அத்துமீறி பொதுஇடங்களில் போஸ்டர் ஓட்டுபவர்கள் மீது IPC 425, 434 ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யலாம் என்று கூறியிருக்கிறது.
இதனால் மாற்று கட்சி அரசியல்வாதிகளுக்கு NO POSTER CHALLENGE என்ற சவாலை விடுத்துள்ளேன். மேலும், இந்த சவாலை கடிதம் மூலமாகவும் குறுஞ்செய்தி மூலமாகவும் அனுப்பியுள்ளேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையரிடம் புகார் மனு அளிக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
போஸ்டர் கலாச்சாரத்தை கைவிட வலியுறுத்தி அமைச்சர் செந்தில் பாலாஜி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நா. கார்த்திக், விஎம்சி மனோகரன், எம்எல்ஏ எஸ்பி வேலுமணி, பி. ஆர்.நடராஜன் எம்.பி, மக்கள் நீதி மய்யம் அனுஷா ரவி, நாம் தமிழர் கட்சி மற்றும் காங்கிரஸ் கட்சியின் மயூரா ஜெயக்குமார் ஆகியோருக்கு அசோக் ஸ்ரீநிதி கடிதம் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.
